சேலம், ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18-ம் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியிருக்கிறார். அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகனான பெயின்ட்டர் நவீன்குமார் என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தியிருக்கிறார். அப்போது திடீரென நவீன்குமார் நண்பர்களுக்கும், சக்திவேல் நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நவீன்குமார் கோஷ்டியினர், சக்திவேல் கோஷ்டியினரை சிறிது தூரம் துரத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். அப்போது சக்திவேல் வயிற்றில், மதுபாட்டிலை உடைத்து நவீன்குமார் குத்தியிருக்கிறார்.
இதில் படுகாயமடைந்த சக்திவேலும், அவர் நண்பர்களும் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, நவீன்குமார் தரப்பினரும் அங்கு வந்தனர். இதனால், தங்களைத் தாக்க வருவதாக நினைத்து, நவீன்குமார் தரப்பினர் சக்திவேல் தரப்பினரைத் தாக்க முற்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
இதனால் காவல் நிலையம் போர்க்களம்போல காட்சியளித்தது. இதைப் பார்த்த போலீஸார் இரு தரப்பையும் விலக்கிவிட்டனர். ஆனாலும் அவர்கள் மாறி மாறி தாக்கிக்கொண்டுனர். இதில் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்துகிடந்தார். போலீஸாரும் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினர். அதன் காரணமாக காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக, மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். அதைத் தொடர்ந்து சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் ஆட்டையாம்பட்டி போலீஸார் நவீன்குமார், சத்யராஜ் (28), ராஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைதுசெய்தனர்.
அவர்கள்மீது ஆபாசமாகத் திட்டுதல், கும்பலாகச் சேர்ந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய இன்னும் ஐந்து பேர்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். தலைமறைவான அவர்களையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே இந்த மோதல் சம்பவம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.