இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மே 28-ம் தேதி புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வீராங்கனைகள் அனைவரும் மல்யுத்தத்தில் வென்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதனால், சில அரசியல் அமைப்பினர், திரைப்பிரபலங்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கே ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இணைந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
இந்த பதக்கங்களுக்கு பின்னால் பல வருட உழைப்பு, தியாகம், முயற்சி இருக்கிறது. அவை தேசத்தின் பெருமை. அதனால் பதங்கங்களைக் கங்கை ஆற்றில் வீசுவது தொடர்பான விஷயத்தில் மல்யுத்த வீரர்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். நாட்டின் சட்டம் வெல்லட்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.