‘டைம்ஸ் நெட்வொர்க் சார்பில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா பொருளாதார மாநாட்டில்’ மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.
அப்போது நிதின் கட்கரி கூறுகையில், “இப்போது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண் துறையின் பங்கு 12% ஆக உள்ளது. பொருளாதார இலக்கை அடைய ஜிடிபி-யில் வேளாண்துறை பங்களிப்பை 24% ஆக உயர்த்த வேண்டும், அதாவது இரட்டிப்பாக்க வேண்டும்.
இந்திய மக்களில் 65% பேர் விவசாயத்தை நம்பி உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு வேளாண் துறையை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக அரசாங்கம் நல்ல பணிகளைச் செய்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பிரச்னையாக பட்டினி, வறுமை மற்றும் வேலையின்மை இருந்தது. வறுமையை ஒழிக்கவும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் பிரதமரின் இலக்கை அடையவும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
விவசாயிகள் எரிசக்தியை உருவாக்குவதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரிக்கும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் நிறைவேறும்.
பசுமையான ஹைட்ரஜன், எல்என்ஜி மற்றும் மின்சாரம் போன்ற சுத்தமான எரிபொருளில் இயங்கும் கட்டுமான இயந்திரங்களை வாங்குவோருக்கு வட்டி மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
கட்டுமானத்தின் தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமானச் செலவைக் குறைக்க வேண்டும். “தற்போது கட்டுமான உபகரணங்கள் டீசலில் இயங்குகின்றன. அவர்கள் பச்சை ஹைட்ரஜன், எல்என்ஜி மற்றும் மின்சாரத்தில் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.65 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் 90% நிறைவடையும் என அரசு எதிர்பார்க்கிறது. டெல்லி மிகவும் மாசடைந்துள்ளது. எனவே, டெல்லியை காற்று, தண்ணீர், மற்றும் ஒலி மாசுவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். நிதி தணிக்கையை விட செயல்திறன் தணிக்கை முக்கியமானது” என்றார்.