கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைத்தளங்கள் மூலம் செயல்பட்டு வருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்ஙனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்த குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன தம்பதியினர் வரை இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கை முதன் முதலில் வெளியே கொண்டு வந்தவர் கோட்டயம் கறுக்கச்சால் பகுதியைச் சேர்ந்த ஜூபி ஜேக்கப் (28) என்ற இளம் பெண்தான். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜூபி ஜேக்கப் போலீஸில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் ஷினோ மேத்யூ மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னை பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துதான் பெரிய நெட்வொர்க்கை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
இந்த வழக்கைத் தொடர்ந்து புகார் அளித்த இளம் பெண் ஜூபி ஜேக்கப் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி ஜூபி ஜேக்கப் வெட்டி கொலைச் செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரது கணவர் ஷினோ மேத்யூ இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என ஜூபி ஜேக்கப்பின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜூபி ஜேக்கப்பின் கணவர் ஷினோ மேத்யூவை போலீஸார் தேடிச் சென்றபோது அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபெற்று வந்த ஷினோ மேத்யூ சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். பார்ட்னர் ஸ்வாபிங் முறைக்கு அடிமையான கணவன், அவரால் பாதிக்கப்பட்ட மனைவி என இருவரின் உயிரும் பறிபோன சோக சம்பவம் கேரளாவில் அரங்கேறி உள்ளது.