கடந்த மூன்று நாள்களாக கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 26-ம் தேதி காலை ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அசோக்குமாரின் இல்லத்தில் சோதனையை அதிகாரிகள் தொடங்கியபோது, அதிகாரிகளுக்கும், தி.மு.க-வினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதிகாரிகள் தன்னைத் தாக்கியதாக, தி.மு.க-வைச் சேர்ந்த குமார் என்பவர் குற்றம்சாட்டினார். மாறாக, வருமான வரித்துறை பெண் அதிகாரி காயத்ரியை தி.மு.க-வினர் தாக்கியதாக, அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. காயத்ரி மட்டுமின்றி, மேலும் மூன்று ஆண் அதிகாரிகளும் தாக்கப்பட்டதாகக் கூறி, நான்கு அதிகாரிகளும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், சிசிக்கை முடிந்து இன்று நான்கு அதிகாரிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அப்போது, அவர்களை அழைத்துச் செல்ல, வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன் உள்ளிட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இன்று மதியம் 12 மணியளவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன், “வருமான வரித்துறை சோதனைக்குச் சென்ற பெண் அதிகாரி உட்பட நான்கு பேரையும் தி.மு.க-வினர் தாக்கியிருக்கின்றனர். வேண்டுமென்றே இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தி.மு.க-வினர் தாக்கியதில், பெண் அதிகாரிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. மற்ற மூன்று அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், மனதளவில் அதிகாரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பணிக்குச் சென்ற இடத்தில், ஆவணங்களைப் பறித்தவர்கள்மீது மேலும் வழக்குகள் பதியப்படும். முதற்கட்டமாக, உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம். அதனடிப்படையில், இன்று எட்டு பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சிலரை கைதுசெய்ய வலியுறுத்தியிருக்கிறோம். வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கான வீடியோ, மீடியா ஆதாரங்கள் இருக்கின்றன.
பொதுமக்களும் அதனை நேரில் பார்த்தனர். பெண் அதிகாரி, தி.மு.க தொண்டர் ஒருவரைத் தாக்கியதாகச் சொல்லப்படும் புகார் குறித்து கேட்கிறீர்கள். அதற்கு, தி.மு.க தரப்பில் ஆதாரம் இருந்தால், காண்பிக்கச் சொல்லுங்கள். வருமான வரித்துறையினர் தாக்கியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டதால், நாங்கள் பயந்து ஓடி விடுவோம் என்று நினைக்க வேண்டாம். சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து தலைமையிடத்திலிருந்து செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றார்.