நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் இன்று அதிகாலை ஈடுபட்டு வந்திருக்கின்றனர். பந்தலூர் அருகிலுள்ள குந்தலாடி பகுதியில் ரோந்து மேற்கொள்கையில், அங்குள்ள டாஸ்மாக் மதுபானக் கடையின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அருகில் சென்றிருக்கின்றனர்.
அங்கு டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து இரண்டு நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அவர்களைப் பிடிக்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது காவலர்களைத் தாக்கிவிட்டு, தப்பித்து ஓட கொள்ளையர்கள் இருவரும் முயற்சிசெய்திருக்கின்றனர்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், தற்காப்புக்காக கொள்ளையர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். சாம்பார் மணி என்று அழைக்கப்படும் கொள்ளையன் மணியின் காலில் தோட்டாப் பாய்ந்ததில், காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாகச் சாம்பார் மணியை மீட்டக் காவல்துறையினர், கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கின்றனர். கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர், “சாம்பார் மணி மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. டாஸ்மாக் கடைகளில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவன் இந்த மணி. அதிகாலை கொள்ளையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது கையும் களவுமாகப் பிடித்தோம்.
இரண்டு காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினோம். தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையனைத் தேடி வருகிறோம். கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து சாம்பார் மணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.