மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள பவுசா தண்டா என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்றில் இருந்த செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த 6 தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். அவர்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் 5 தொழிலாளர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் செப்டிக் டேங்கில் இறங்கி சுத்தம் செய்ததால்தான் உயிரிழக்க நேரிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து டாக்டர்கள் விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 2022-ம் ஆண்டு வரை நாட்டில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 188 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் செப்டிக் டேங்கில் விஷ வாயு தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்திருக்கிறார். 2019-ம் ஆண்டில் 118 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த நிலையில், 2021-ம் ஆண்டு இது 24 ஆக குறைந்தது. கடந்த மாதம் ஹரியானாவில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த போது 4 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.