இன்றைக்கு சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதனை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கின்றனர். சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டு சிலர் தற்கொலையும் செய்கின்றனர்.
அது போன்று சோஷியல் மீடியாவில் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டப் பிறகு தற்கொலை செய்து கொள்பவர்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து, அதனை தடுத்து வருகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம்களில் வரக்கூடிய தகவல்களை அந்த நிறுவனங்கள் உடனுக்குடன் மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்கு பகிர்கின்றனர்.
இதற்காக சைபர் பிரிவு போலீஸார் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை வைத்திருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமான முறையில் தற்கொலை மனநிலையில், பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் யாராவது தேடினாலோ அல்லது தகவல்களை பகிர்ந்து கொண்டாலோ உடனே சம்பந்தப்பட்ட நிறுவனம் மும்பை சைபர் பிரிவுக்கு சம்பந்தப்பட்ட நபரின் இமெயில், போன் நம்பர் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கும். அவர்களுடன் சோஷியல் மீடியாவில் போலீஸார் சாட்டிங் செய்து அவர்களின் தற்கொலை மனநிலையை மாற்றுகின்றனர்.
போன் நம்பர் இருந்தால் அந்த நம்பரில் தொடர்பு கொண்டு கவுன்சிலிங் கொடுக்கின்றனர். இதற்காக மும்பை சைபர் பிரிவு போலீஸார் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராமிடமிருந்து தகவல்களை பெறும் இன்ஸ்பெக்டர் பாட்டீல் இது குறித்து, “சில நேரங்களில் அதிகாலை 3 மணிக்கு கூட எங்களுக்கு தகவல் வரும். இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் வரக்கூடிய பதிவுகளை அப்படியே எடுத்து எங்களுக்கு அனுப்புவார்கள். சம்பந்தப்பட்ட நபரின் போன் நம்பர் இருந்தால், உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேசுவோம்.
போன் ஆப் ஆகி இருந்தால் அவரின் சோஷியல் மீடியா கணக்கை வைத்து அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து ,அத்தகவல்களை உள்ளூர் போலீஸாருக்கு அனுப்பி வைப்போம். எங்களுக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் பற்றிய விபரம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் இருந்து இது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் பற்றிய விபரங்கள் வந்து கொண்டிருக்கும். இந்த ஆண்டில் மட்டும் அது போன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 34 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறோம். மது பழக்கத்தால் அதிக அளவில் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது.
ஒருவர் தன்னுடைய மனைவி, அவரின் காதலனுடன் வெளியேறிவிட்டார் என்று கவலை தெரிவித்திருந்தார். உடனே நாங்கள் அப்பெண்ணின் குழந்தைகளின் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டோம். அதனை பார்த்து அப்பெண் திரும்ப வந்துவிட்டார். இதன் மூலம் அந்த நபரின் தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டது” என்றார்.