“12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்
தொழிலாளர் தினமான இன்று, சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவிலுள்ள நினைவுச்சின்னத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தி.மு.க தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவை சார்பில் மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிவப்பு நிற உடை அணிந்துவந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “தி.மு.க அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை மசோதாவை தி.மு.க தொழிற்சங்கமே எதிர்த்ததைப் பாராட்டுகிறேன். தி.மு.க ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு. விட்டுக்கொடுப்பதை என்றும் அவமானமாக நினைக்கவில்லை, அதைப் பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர பணி சட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகும் அது குறித்து அவதூறான தகவல்களைப் பரப்புகின்றனர்” என்றார்.