கேரள மாநிலத்தின் தங்கத் தலைநகரமான திருச்சூரில் தொடங்கப்பட்டு, தங்க நகை விற்பனைத் துறையில் முன்னோடி நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், ரூ. 5500 கோடி ரூபாய் முதலீட்டில் 100 புதிய ஷோரூம்களைத் திறக்கவுள்ளது. ஏற்கெனவே தெனிந்தியாவில் பல ஷோரூம்களை வெற்றிகரமாக நடத்திவரும் ஜோஸ் ஆலுக்காஸ், இனி இந்தியாவின் மற்ற முக்கிய பகுதிகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தன் கிளைகளை திறக்க முயற்சிகள் எடுக்கும் என்று அறிவித்துள்ளனர்.

ஜோஸ் ஆலுக்காஸின் நிறுவனர், ஜோஸ் ஆலுக்கா, அவரது மகன்களும், நிர்வாக இயக்குநர்களுமான வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ. ஆலுக்கா, ஜான் ஆலுக்கா ஆகியோர், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் மாதவனுடன் இணைந்து இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் டீம்

ஜோஸ் ஆலுக்காஸ்-  60 ஆண்டு பயணம்

ஆசாரிகளிடம் மட்டுமே தங்க நகைகளை செய்து வாங்கிய காலத்தில், முதல் முறையாக தங்க நகைகளை உருவாக்கி அதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தார் ஜோஸ் ஆலுக்கா. இவர்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக பல ஆயிரம் டிசைன்களுடன் தங்க நகை கடையைத் திறந்தது.

இது தவிர, ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் (UAE) 916 முத்திரை பதித்த தங்க நகைகளை அவர் அறிமுகப்படுத்திய போது, அது மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதன் மூலம், 916 தர முத்திரையிட்ட நகைகளைக் கண்டுபிடித்த முதல் தங்க நகை விற்பனையாளர் என்ற சாதனை படைத்து, தென் இந்தியாவில் தங்க நகைகளின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியவர் என்ற பெருமையும் பெற்றார்.

வர்கீஸ் ஆலுக்கா, “ஷோரூம்களைத் தாண்டி, எங்கள் ஆன்லைன் தளத்தில், உங்கள் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் கோல்டு வாங்க முடியும். 10 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கூட வாங்கமுடியும். கொரோனா சமயத்தில், மக்கள் தங்க நகைகள் வாங்குவது குறைந்தாலும், இப்போது மீண்டும் பழைய நிலைக்கு விற்பனை திரும்பியுள்ளது. சொல்லப்போனால் இந்த அட்சய திருதியில், கடந்த ஆண்டைவிட 25% -40% அதிக தங்க நகை விற்பனை ஆகியுள்ளது” என்றார்.

ஜோஸ் ஆலுக்காஸ்

“ஜோஸ் ஆலுக்காஸில் தைரியமாக தங்கம் வாங்கலாம். அது ராசியான தங்கம் என வாடிக்கையாளர்கள் எங்களை நம்பி தைரியமாக நகைகளை வாங்குகிறார்கள். அதனால், அதே தைரியத்தை எங்கள் பிராண்ட் கொள்கையாக அறிவிக்கிறோம்” என்றார், பால் ஜெ. ஆலுக்கா.

தொடர்ந்து பேசிய ஜான் ஆலுக்கா, “ஜோஸ் ஆலுக்காஸில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய டிசைனை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் நாங்கள் செயலாற்றி வருகிறோம். 50 ஷோரூம்கள் மூலம் மட்டுமே 9000 கோடி விற்பனை வருவாயை ஈட்டி நாங்கள் சாதனை படைத்துள்ளோம். எங்களை விட அதிக ஷோரூம்கள் கொண்ட நிறுவனங்கள் கூட நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் இருக்கிறது” என்றார்.

நடிகர் மாதவன்

கடைசியாக பேசிய நடிகர் மாதவன், “ஜோஸ் ஆலுக்காஸ், அறுபது ஆண்டு காலமாக ஒரு நிலையான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. நான் இந்த நிறுவனத்தை முழுவதுமாய் நம்புவதால்தான், இதன் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறேன். அவர்களுடைய தொழில் திட்டமும், தொழில் நெறிமுறையும் என்னை மிகவும் கவர்ந்தன” என்றார்.

நடிகர் மாதவனுடன் சேர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்காக எதிர்காலத்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்கின்றனர் ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.