தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பணமும், பள்ளியின் ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கிப் பாராட்டியுள்ளார் நடிகர் சூரி. குறிப்பாக, தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரி பாராட்டிய உற்சாகத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியை கலா சரவணனிடம் பேசினோம். ஆச்சர்யம் விலகாதவராய் நம்மிடம் பேசுகிறார்.

“உதயமார்த்தாண்டபுரம் அடிப்படை வசதிகள் இல்லாத கடற்கரை கிராமம். கூலி வேலைக்குச் செல்பவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்களின் பிள்ளைகள்தான் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், மாணவர்களை உயர்த்த சிறப்பா செயலாற்றிக்கிட்டு வர்றாங்க எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி.

அறிவியல் ஆசிரியர் கலா, கணித ஆசிரியர் சிவகுமார், பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி

குறிப்பா, கடந்த 10 வருசமா எங்க மாணவர்கள் 29 பேர் தேசிய திறனறித் தேர்வில் பாஸ் பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு, மாணவர்களிடம் போட்டித்தேர்வுகளை ஊக்கப்படுத்தும் விதமா தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வை நடத்திவருகிறது. இத்தேர்வை எட்டாவது படிக்கிற மாணவர்கள் மட்டும்தான் எழுதமுடியும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மனத்திறன் உள்ளிட்ட பாடங்களைச் சேர்த்து 180 மதிப்பெண்ணுக்கு இந்தத் தேர்வு நடக்கும். 90 மதிப்பெண் எடுத்தால் பாஸ். இதுல, பாஸ் பண்ணுற ஒவ்வொரு மாணவருக்கும் மத்திய அரசு 12-ம் வகுப்பு முடிக்கிறவரைக்கும் மாசா மாசம் 1,000 ரூபாய் ஸ்காலர்ஷிப்பை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.

குறிப்பாக, 8-ம் வகுப்போடு நிறைநிற்றல் கூடாது என்பதற்காக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்புவரை நான்கு வருடங்களுக்கு மொத்தம் 48,000 ரூபாய் உதவித்தொகையை வழங்குகிறது. தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும்போது ஊரக திறனாய்வுத் தேர்வையும் எழுதலாம். இப்படி, மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்தத் தேர்வுக்காக ஏழாம் வகுப்பு படிக்கும்போதே மாணவர்களைத் தயார்படுத்த ஆரம்பித்துவிடுவார் எங்கள் தலைமை ஆசிரியர் சாந்தி. எங்க கணித ஆசிரியர் சிவகுமார் சாரும் தொடர்ந்து டியூஷன்லாம் வெச்சு மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தும் தேர்ச்சி பெறுவதற்கு முக்கிய காரணம்.

சூரி

அப்படித்தான், கடந்த மார்ச் இறுதியில் தேர்வு நடந்தது. எங்க ஸ்கூலிலிருந்து 14 பேர் போய் கலந்துகிட்டாங்க. அதுல, 6 மாணவர்கள் பாஸ் பண்ணிட்டாங்க. என் கணவர் மூலமா இது சூரி சாருக்குத் தெரிஞ்சிருக்கு. உடனே, எனக்கு திடீர்னு போன் பண்ணி சூரி சார் வாழ்த்துகள் சொன்னாங்க. அதோடு இல்லாம, எங்க ஸ்கூல் டீச்சர்ஸ் ஒவ்வொருத்தருக்கும் வெள்ளி நாணயம், மாணவர்களுக்கு நிதியுதவி மற்றும் டிபன் பாக்ஸ், பேனா, நோட்டு உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இதுல, முக்கியமான விஷயம் என்னன்னா, திறனறித் தேர்வுல தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமல்ல, கலந்துகொண்டு தேர்ச்சி பெறாத 8 மாணவர்களுக்கும் அதே நிதியுதவி, பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். அதுதான், ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. அடுத்தமுறை, அந்தத் தேர்வுல கலந்துக்கணும்ங்குற ஊக்கத்தைக் கொடுத்திருக்கு அவரோட இந்தப் பரிசுகள். சூரி சாருக்கு வெறும் நன்றியை மட்டும் சொல்லிவிடமுடியாது” என்று நெகிழ்ந்துபோய்ப் பேசுகிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.