விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணியில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு முகேஷ் என்ற இளைஞர் காசாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை 10.40 மணியளவில் தனக்கு உடல்நலம் சரியில்லை எனவும், அதனால் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறேன் எனவும் வங்கி மேலாளரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், அதன் பின்னர் அவா் வங்கிக்கு திரும்பாமல் போயுள்ளார். எனவே, அவரை போனில் தொடா்புகொண்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது.
மேலும், அவரது பொறுப்பில் இருந்த கேபினை சோதித்தபோது, ரூ.42,50,000 மற்றும் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக வைத்திருந்த ரூ.1,39,500 என மொத்தம் ரூ.43,89,500 காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், வங்கியின் சி.சி.டி.வி காட்சிகளை சோதித்து பார்த்தபோது முகேஷ் பணத்தை எடுத்துச் சென்றது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சிந்தாமணி வங்கி மேலாளர், விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இரண்டு தனிப்படைகளை அமைத்து முகேஷை தேடி வருகின்றனர். இந்த நிலையில், முகேஷை மர்ம கும்பல் மிraட்டி கடத்தியதாக கூறி, முகேஷ் தனது சகோதரிக்கு வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நாம் தனிப்படை காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “அது பொய்யான தகவல். அவரை யாரும் கடத்தவில்லை. இருசக்கர வாகனத்தில், முகேஷ் சென்னை நோக்கி தனியாகதான் சென்றிருக்கிறார் என்றுதான் தெரிய வந்துள்ளது” என்றனர்.