திருச்சி பொன்மலை ஜி கார்னரில் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அ.தி.மு.க., 51-ம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா மாநாடு ஓ.பி.எஸ் தலைமையில் வருகின்ற 24-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்கான பந்தல் மற்றும் கேலரிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனை மாநாடு ஏற்பாட்டாளர்களான முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே, ‘அ.தி.மு.க., கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பி.எஸ் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என 500-க்கும் மேற்பட்ட அ.தி.முக.,வினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதையடுத்து இந்த விவகாரத்தையொட்டி ஓ.பி.எஸ் தரப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், “எடப்பாடி பொதுச்செயலாளர் என்பதெல்லாம் மாயை. அவர் பொதுச் செயலாளர் என அவரே முடி சூட்டிக் கொண்டார். அவரை எதிர்த்து யார் போட்டியிட்டார்கள்? என்றைக்கு தேர்தல் நடந்தது? வாக்குப்பெட்டியில் வாக்குகள் செலுத்தப்பட்டதா? இல்லையே… அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தடை விதிக்கவில்லை. நான் என்னோட கையில அ.தி.மு.க., கொடியை பச்சை குத்தி 40 வருஷம் ஆச்சி. இப்ப அதை அறுத்து எறியட்டுமா… இல்ல என் கையை அறுத்துடுவாங்களா.. என்ன விளையாடுறீங்க..!
இந்தக் கட்சி உயர்ந்து உயர்ந்து பல்வேறு நிலைகளில் ஆட்சியில் அமர்வதற்கு உழைத்தவர்கள் நாங்கள். எங்களுக்கு இல்லாத உரிமை எவருக்கும் கிடையாது” என ஆவேசமானார்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமோ, “எம்.ஜி.ஆர் கொடுத்த கொடியை யார் வேணும்னாலும் பயன்படுத்தலாம். எந்த கிரிமினல் வழக்குகள் போட்டாலும், அதை சந்திக்க நாங்கள் தயார். சட்டச் சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்காக எல்லாம் அ.தி.மு.க., கொடியில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தை வைக்கவில்லை” என்றார்.