விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்ட பகுதிகளில் கஞ்சா, கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள் உத்தரவின்பேரில், சிவகாசி சரக உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் மேற்பார்வையில் போலீஸார் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சிவகாசி அம்மன் கோவில்பட்டி புதுத்தெரு, பாரதி நகர் ஆகியப் பகுதிகளில் 24 மணிநேரமும் மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்குச்சென்று சோதனை நடத்திய போலீஸார், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைதுசெய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார், “தகவலின்பேரில் அப்பகுதிகளில் நடத்திய தீவிர ரோந்தில் சந்தேகப்படும்படி டூவீலரில் நின்றுக்கொண்டிருந்த நபரைப்படித்து விசாரணை மேற்கொண்டோம். இதில் அவர் பாரதிநகர் பகுதியைச்சேர்ந்த பிரவீன்குமார் (வயது 21) என்பதும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுவிற்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அவருடைய டூவீலரை சோதனை செய்ததில் அதிலிருந்து சுமார் 10 மதுபாட்டில்கள், 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மதுவிற்பனைக்கு பயன்படுத்திய டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது. டூவிலரில் செல்போன்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பிரவீன்குமாரிடம் நடத்திய விசாரணையில், `மதுபாட்டில் வாங்குவதற்கு போதியப்பணம் இல்லாமல் வருவோரிடம், செல்போனை வாங்கிக்கொண்டு மதுபாட்டில் விற்பனை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்திருக்கிறார். எனவே இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீஸார், பிரவீன்குமாரை கைதுசெய்தனர்” என்றுத் தெரிவித்தனர்.