கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தேனீ வளர்ப்பு இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தேனீ வளார்ப்புக் கருத்தரங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனை தேசிய தேனீ வாரிய உதவி ஆணையர் மனோஜ் சர்மா காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, `தேசிய தேனீ வாரியம் சார்பில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வேளாண் பயிர்களில் அயல்மகரந்தச் சேர்க்கை அதிகரித்து மகசூல் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பில் தேன் மட்டுமின்றி அதன் மெழுகு மூலமும் வருவாய் ஈட்ட முடியும். அதேபோல் மதிப்புக்கூட்டு பொருள்கள் மூலமும் வருவாய் ஈட்ட முடியும்” என கூறினார்.
இவரை அடுத்து பேசிய வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மேலாண்மை மற்றும் பூச்சியியல் துறை இயக்குநர் எம்.சாந்தி, ‘தேனீக்களுக்கான நோய் தாக்குதல், பராமரிப்பு, நோய் கட்டுப்பாடு முறைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து ஆண் மற்றும் பெண் தேனீக்களை கண்டறிதல், ராணி தேனீ கண்டறிதல் , தேனீப் பெட்டியில் எந்தளவு தேனீக்களை வைப்பது, தேனீ பெட்டிகளின் பராமரிப்பு மழைக்காலங்களில் தேனீக்கள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
தேனீ வளர்ப்புக் கருத்தரங்கில் பிற்பகல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் கிராந்திகுமார் தோட்டக் கலைத் துறையில் தேனீ வளர்ப்பு தொடர்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.