`பிரதமர் பங்கேற்கும் விழாவை புறக்கணிக்கும் சந்திரசேகர ராவ்’
பிரதமர் மோடி இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக தெலங்கானா மற்றும் தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை தெலங்கானாவில் சுமார் 11,360 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக செயலாற்றி வருகிறார். பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தெலங்கானா வரும்போது அவர்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் சந்திரசேகர் ராவ்.
`எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை’ – தமிழக அரசு அனுமதி
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறிய நிலையில், விசாரணை நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2017- 21 காலகட்டத்தில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டது. அதில்தான் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.