சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கடளை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து, கலாஷேத்ரா புகார் குறித்து விசாரணை நடத்துமாறு காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார் டி.ஜி.பி சைலேந்திர பாபு.
இதனிடையே, பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், இதை பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தேசிய மகளிர் ஆணையம் டி.ஜி.பிக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் புதன் கிழமையன்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேரடியாக கலாஷேத்ராவுக்கு வந்து அங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். அதே போல் கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து பேசியுள்ளார்.
ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடல்
இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கலாஷேத்ரா முற்றிலுமாக நிராகரித்ததுடன் தேவையில்லாத வதந்திகளை பரப்பி நிறுவனத்தை இழிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ருக்மணிதேவி கல்லூரி வரும் 6-ஆம் தேதி வரை மூடப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.