வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
செய்தித்தாளில் குழந்தை வளர்ப்பிற்கென்று சமீப காலங்களில் வாட்ஸ்ஆப் -பில் குழுக்கள் இருப்பதாகவும், முதன்முதலில் கருவுற்று இருக்கும் பெண்களுக்கும், புதிய அன்னைகளுக்கும் அவை மிகவும் உபயோகமாக இருப்பதாகவும் ஒரு கட்டுரைப் படித்தேன்.. அதுவும் நோய்த்தொற்றுக்காலத்தில், ஊரடங்கு சமயத்தில் ,மருத்துவர்கள் கிடைக்காத நேரத்தில் இது போன்ற குழுக்களில் உள்ள அனுபவம் மிகுந்த பெண்களின் அறிவுரைகள் பலருக்கு உபயோகமாக இருந்தது எனவும் கூறப்பட்டிருந்தது.
எனக்கு இருபத்துமூன்று வருடங்களுக்கு முன் என் வாழ்க்கையில் நடந்தேறிய சின்னசின்ன விஷயங்கள் தான் நினைவிற்கு வந்தன.
நானும் என் கணவரும் மட்டும் சென்னையில் வசித்து வந்தோம். என்னைப் பெற்றவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அவரைப் பெற்றவர்கள் வேறு ஊரில் இருந்தனர்.
எனக்கு குழந்தை உண்டாகி குழந்தை பிறக்கும் வரை அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். அந்த அலுவலகத்தில் முக்கால்வாசி இளம்பெண்கள் தான். என் கர்ப்பம் தரித்த நாட்கள், அவர்களோடு கழிந்ததால் , எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.
என் கணவருக்கு வேலைபளு அதிகமாக இருந்த நாட்களில் என் அலுவலகத் தோழிதான் என்னுடன் மருத்துவரை பார்க்க மாதாமாதம் வருவாள். மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அவரவர் தாயோடு வந்து மிகவும் சீரியஸாக அமர்ந்துக் கொண்டிருக்க, நானும் என் தோழியும் டோக்கன் நம்பர் வாங்கி விட்டு, பின் அருகில் இருக்கும் உணவகத்திற்கு சென்று சிரித்து பேசியபடியே வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு வருவோம்.
எனக்கு அந்த நாளில் பிரசவம் பார்த்த பெண்மருத்துவர் மிகவும் திறமையானவர். வயதானவர். தேவையில்லாத ஸ்கேனிங் எல்லாம் கிடையவே கிடையாது. என்னிடம் இரண்டு நிமிடங்கள் தான் பேசுவார். வேண்டியதைக் கூறிவிட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வந்தால் போதும் எனக் கூறிவிடுவார் அவ்வளவு தான்.
குழந்தை பிறந்தவுடன் என் மாமியார் ஒன்றரை மாதங்கள் கூட இருந்து என்னைக் கவனித்துக் கொண்டார். அதற்குப்பின் அவர் ஊருக்குச் சென்று விடவே, என் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டிய முழுபொறுப்பும் என்னுடையது என்றானது. என் கணவர் அலுவலக விஷயங்களில் மிகவும் பிஸியாக இருந்த நாட்கள் அவை. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.
பிறகு திட உணவு கொடுக்க ஆரம்பித்த போதுதான்,. என்ன கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பல குழப்பங்கள். என் உறவினர்கள் யாராவது அறிவுரைகள் வழங்கினாலும், எனக்கு என் குழந்தை நல மருத்துவர் கூறினால் தான் ஒப்புக் கொள்வேன்.
நான் மாதாமாதம் அவரைச் சந்தித்து என் சந்தேகங்களைக் கேட்கும் தருணங்களில் மருத்துவருக்கு காதுவலி வந்து விடும். நான் எப்போது அந்த இடத்தை விட்டு நகர்வேன் என்ற யோசனையிலேயே இருப்பார் அவர். வெளியே வந்தவுடன் என் கணவரும் பாவம்மா டாக்டர் ..இவ்ளோ கேள்வியா கேட்டுட்டு இருப்ப அவர்ட்ட… என நொந்து கொள்வார்..
எனக்கு வேறுவழியில்லை. தனியாக குழந்தையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமே.. நல்லபடியாக வளர்க்க வேண்டுமே என்ற கவலை. அதுவுமில்லாமல் ஊரிலேயே நான்மட்டும் தான் குழந்தையை நன்றாக வளர்ப்பது போல் ஒரு எண்ணத்தைக் கொண்டிருந்தேன்.
என் குழந்தைக்கு பசி இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் கவலைப்படமாட்டேன். கடிகாரத்தைப் பார்த்து வேளாவேளைக்கு விதவிதமாக ஊட்டுகிறேன் என நினைத்து அவளைக் கட்டாயப்படுத்தி ஊட்டி விடுவேன்..அவள் அனைத்தையும் சாப்பிட்டு விட்டு கலர்கலராக இரவில் வாந்தி எடுப்பாள்.
மீண்டும் மருத்துவரிடம் சென்று முறையிடுவேன். அவரும் ஏதாவது சமாதானமாக பேசி என்னை வெளியில் அனுப்பி விடுவார். சளி, இருமல், காய்ச்சல் என ஏதாவது என் குழந்தைக்கு வந்தால் அவ்வளவுதான்..எனக்கு கையும் ..ஓடாது .. காலும் ஒடாது. டாக்டர், மருந்துச் சீட்டு சிரப், டாக்டர், மருந்துச் சீட்டு ,சிரப்,… இவை ரிப்பீட்டு.. குழந்தைக்கு உடம்பு சரியாகும்வரை எனக்கு உணவு இறங்காது..
குடும்பங்களில் பெரியவர்கள் இருந்து குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க சொல்லித் தருவது ஒரு வரம். அந்த வரம் அமையப் பெறாதவர்கள் இப்படித்தான்.. மருத்துவர்கள் இல்லை வாட்ஸ்ஆப் குழுக்களை நம்பி இருக்கவேண்டிய நிலை..
ஏதோ என் அறிவிற்கு எட்டியபடி அன்று என் குழந்தை வளர்ந்தாள்..வளர்ப்பில் பாசம் இருந்தது. அது அவளை பாதி வளர்த்தது எனக் கூறலாம். ஐந்தாண்டுகள் கழித்து இன்னொரு குழந்தை பிறந்தபோது, முதல் குழந்தை வளர்ப்பில் ஏற்பட்ட குழப்பங்கள் கொஞ்சம் குறைந்திருந்தது எனவே சொல்லலாம்.. சரியோ..தவறோ.. அனுபவங்கள் தான் வாழ்க்கை..!
–Mrs. J. Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.