“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்” என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
திருச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பதவி வெறியாலும், ஒரு சிலரின் சுயநலத்தாலும் அதிமுக பலவீனமாகி இருக்கிறது. அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர். அமமுக பொறுப்பாளர்கள் சிலர் மீது குறைகள் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மேல்நிலை வகுப்பு படித்த மாணவர்கள் பலரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், புள்ளி விவரங்களோடு அதை தெளிவுபடுத்த வேண்டும். இது அமைச்சரின் கடமை.
கடந்த 2011ல் அரசியல் காரணங்களுக்காக, சிலரது பதவிகள் பறிக்கப்படும் போது, ‘மேல்முறையீடு செய்து, இறுதி தீர்ப்பு வரும் வரை அவர் பதவியில் இருக்கலாம்’ என்பதை, ராகுல் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கொண்டு வந்த சட்டம் அவரையே இன்று பாதித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை பற்றி கருத்து கூற எதுவும் இல்லை” என தெரிவித்தார்.