ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வளையப்பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் ராமநாதபுரம் தனி ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளையராஜாவை அப்பெண் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் அப்பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இளையராஜாவிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு மன்றாடியபோது, `நான் வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய உள்ளேன். உன்னை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என அப்பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். இதையடுத்து இளையராஜாவை அழைத்து விசாரணை நடத்தியபோது திருமணம் செய்வதாக ஏமாற்றி அப்பெண்ணிடம் நெருங்கி பழகியது உறுதியானது. இதையடுத்து இளையராஜாவை கைது செய்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை விசாரணையின் அடிப்படையில், துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு இளையராஜாவை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.