டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்களில் தசை நார் கிழிந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் 2 அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இப்போது அவர் படிப்படியாக குணமடைந்து வருகிறார்.
ரிஷப் பண்ட் மீண்டும் உடற்தகுதியை பெற்று, குணமடைந்து வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ”ரிஷப் பண்ட் எங்கள் அணியின் இதயம் மற்றும் ஆன்மா. ஐபிஎல் போட்டிகளின் போது ரிஷப் பண்ட் டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருப்பார். அதுவொரு அழகான உலகம். ஆனால் அது இந்த ஆண்டு சாத்தியமில்லை என்றாலும் சாத்தியப்படக்கூடிய வழிகளில் அவரை அணியின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். அவருடைய ஜெர்சி எண்ணை நமது சட்டைகளிலோ அல்லது தொப்பிகளிலோ வைத்திருக்கலாம். அவர் எங்களுடன் இப்போது இல்லாவிட்டாலும், அவர் எங்கள் லீடர் என்பதை எடுத்துரைப்பதற்காக இதை செய்யலாம்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டாலும், ரிஷப் பண்ட்-க்கு பதிலாக கீப்பரை இன்னும் முடிவு செய்யவில்லை. சர்ஃபராஸ் கான் எங்களுடன் இணைந்துள்ளார். பயிற்சி ஆட்டங்களில் அவரது செயல்பாட்டை பொறுத்து அவரை விக்கெட் கீப்பராக நியமிப்பது குறித்து முடிவு செய்வோம். ரிஷப் விட்டுச் சென்ற இடம் மிகப்பெரியது. புதிதாக வரவுள்ள இம்பாக்ட் பிளேயர் விதியை நாங்களும் பயன்படுத்துவோம்” என்று கூறினார்.