டி20 போட்டிகளின் ஃபெர்பார்மன்ஸ் அடிப்படையில் ஒரு வீரரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைப்பது சரியானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.
தனது 360 டிகிரி ஆட்டத்தின் காரணமாக மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து முற்றிலும் தனித்து நிற்பவர் சூர்யகுமார் யாதவ். இச்சூழலில் சமீப நாட்களாக சூர்யகுமார் யாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தும் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். 3 ஒருநாள் போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்துகளிலேயே அவுட் ஆனார். 3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட் ஆன் சூர்யகுமார் யாதவை சமூக வலைத்தளங்களில் முன்னாள் வீரர்கள் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் சூர்யகுமார் யாதவ், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். இதுவரை 21 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் மொத்தமாகவே 433 ரன்களை தான் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் மட்டும் அடங்கும்.
இந்த நிலையில் டி20 போட்டிகளின் ஃபெர்பார்மன்ஸ் அடிப்படையில் சூரியகுமார் யாதவை ஒருநாள் போட்டிகளில் தேர்வு செய்ததற்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு கிடைக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் சூரியகுமார் யாதவ். டி20 கிரிக்கெட் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. டி20 போட்டிகளின் ஃபெர்பார்மன்ஸ் அடிப்படையில் ஒரு வீரரை ஒருநாள் போட்டிகளில் விளையாட வைப்பது சரியானதாக இருக்காது.
கிரிக்கெட்டில் நிலைத்திருக்க சிறந்த திறன் தேவை. ஒரு திறமையான கிரிக்கெட் வீரரை ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.