பெரம்பலூரில் அரசு பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பிரியங்கா(28) என்பவர் கடந்த மூன்று மாதகாலமாக பணிபுரிந்து வந்தார். இவர் ஆத்துர் அருகே உள்ள சிவகங்கைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. திருமணமாகாத பிரியங்கா பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் தங்கி பணிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவருடைய சகோதர் அலைபேசியில் கூப்பிட்டபோது பிரியங்கா போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து நேரில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிரியங்காவின் தந்தை ராஜசேகர் நேரில் வந்து பார்த்தபோது பிரியங்காவின் அறை உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பிரியங்கா வீட்டின் ஜன்னலில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தரையில் அமர்ந்த நிலையில் உயிரற்று இருந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவர் பிரியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.