தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கண்மாயில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதனை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்திவருகின்றனர் காவல்துறையினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள L.வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் சிதைந்த நிலையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதை கண்ட கிராம மக்கள் காடல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து L.வெங்கடாசலபுரம் கிராமத்திற்கு சென்ற போலீசார் அங்குள்ள கண்மாயில் சிதைந்த நிலையில் இருந்த மனித எலும்புகளை கைப்பற்றி, அங்குள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட அந்த மனித எலும்புகளை சென்னைக்கு ஆய்விற்கு அனுப்பும் பொருட்டு அவற்றை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே இங்கு கண்டெடுக்கப்பட்ட இந்த மனித எலும்புகளின் பாலினம், வயது, எத்தனை நாட்கள் பழமையானது போன்ற விபரங்கள் தெரியவரும் என்றும், அதனைக்கொண்டு தான் இப்பகுதியில் காணாமல் போன நபர்களின் வழக்குகள் மூலம் இறந்த நபர் யார்? இது கொலையா-தற்கொலையா? என தங்களது முதற்கட்ட விசாரணையை நடத்தவிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரின் இக்கண்மாயில் இவ்வளவு நாட்கள் தண்ணீர் இருந்து தற்போது வற்றியப்பின் தான் இந்த எலும்புகள் காணப்படுகிறது. ஆகையால் யாரேனும் இக்கண்மாயில் நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் எலும்புகளாக கூட இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.