இன்று உலக தூக்க தினம். ஒவ்வொரு நாளும் துடிப்புடன் வேலை செய்யவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் தூக்கம் அவசியமான ஒன்று.
தூக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது ஒருவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும். ஆரோக்கியமான தூக்கத்திற்கான பல வழிமுறைகள் உள்ளன.
இரவு தூக்கம்தான் நல்லது. பகலில் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்களுக்குத் தூங்கலாம். ஆனால், நீண்ட நேரம் தூங்கக் கூடாது. பகலில் தூக்கம் வரும்போது, முடிந்தால் சிறிய நடை செல்லுங்கள்; ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள். பகல் தூக்கத்தைத் தவிர்த்தாலே, இரவில் நல்ல தூக்கம் வரும்.
அதிகத் தடிமன் உள்ள தலையணை வேண்டாம்; மிகவும் மென்மையான தலையணை வேண்டாம். மிதமான தடிமன் உள்ள, பருத்தியாலான தலையணைகளைத் தேர்ந்தெடுங்கள். தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள்.
இரவு மிதமான, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவுக்குப் பின்னர் காபி, டீ, சாக்லேட் அறவே வேண்டாம். இவற்றில் உள்ள காஃபைன் தூக்கத்தை விரட்டும். மூளையைப் பாதிக்கும்.
உடற்பயிற்சி செய்யும்போது, உடல் முழுவதும் சோர்வு அடையும். அது நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
எலெக்ட்ரானிக் திரைகளில் இருந்து வெளியேறும் நீலவண்ண ஒளி, உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும் இயல்புடையது. எனவே, தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே, டிவி, கம்ப்யூட்டர், செல்போனை அணைத்துவிட வேண்டும்.
படுக்கை என்பது தூங்க மட்டுமே என்கிற கொள்கையைப் பின்பற்றுங்கள். படுக்கையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்ப்பது, குழந்தையின் ஹோம்வொர்க் செய்வது, டி.வி பார்ப்பது ஆகியவற்றைத் தவிருங்கள்.
முடிந்தவரை படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டாம்.
புகையும் மதுவும் தூக்கத்தை மட்டும் அல்ல, உடல்நலத்தையே அழிக்கும் தீய பழக்கங்கள். மதுவின் போதையில் மயங்கிக்கிடப்பது தூக்கம் அல்ல. மதுவால், ஆழமான தூக்கத்தைக் கொடுக்க முடியாது. புகையும் மதுவும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
உடலின் கடிகாரத்தைச் சீராக்குங்கள். சாப்பிடுவது, படுக்கைக்குச் செல்வது, எழுவது என அனைத்தையும் அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் செய்வதை வழக்கமாக்குங்கள். நேரத்திலேயே உறங்கி நேரத்திலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள்.