இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக, முதல் ஆசிரியராக வலம்வந்த பெண் என என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. அவர் இறந்த தினம் இன்று!
சாவித்ரி, 1831 ஜனவரி 3, மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் பிறந்தார். தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர்.
அன்றைய வழக்கப்படி, 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பது வயதான சாவித்ரியை `ஜோதிராவ் புலே’ என்ற 13 வயது சிறுவனுக்கு, இளம் வயதிலேயே மணம் செய்து கொடுத்தனர்.
அன்றைய காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட சாதியினர் கல்வி கற்க உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜோதிராவின் கல்வி தடைப்பட்டது. ஆனாலும் ஸ்காட்டிஷ் மிஷனரி பள்ளி ஒன்றில் கல்வியைத் தொடர்ந்தார் ஜோதிராவ்.
மனைவிக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு தேர்வுகளை 1846 – 47 ஆம் ஆண்டுகளில் எழுதி வெற்றி பெற்றார் சாவித்ரி.
ஆசிரியப் பணிபுரிய, தகுந்த பயிற்சி பெற வேண்டும் என எண்ணிய சாவித்ரி, அஹமதுநகரில் உள்ள சிந்தியா ஃபரார் என்ற ஆங்கிலேயப் பெண்ணின் பள்ளியிலும், புனே நகரில் மிஷைல் பள்ளியிலும் ஆசிரியப் பயிற்சி பெற்றார்.
மஹர்வாடா பகுதியில் 1847 ஆம் ஆண்டு சுகுணாபாயுடன் இணைந்து பெண்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார் சாவித்ரி. அதன்பின் 1848 ஜனவரி 1 அன்று, முதல் பெண்கள் பள்ளியை புனேயின் பிடேவாடா பகுதியில் தொடங்கினர் ஜோதிராவ் – சாவித்ரி தம்பதி.
அப்போது, உயர்சாதி ஆசிரியர்களைக் கொண்டு வேதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தன. அதற்கு நேரெதிராக கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று நவீன கல்விமுறையையும் பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்தது புலே பள்ளி.
1851-ம் ஆண்டு, மூன்று பெண்கள் பள்ளிகளைத் திறந்து, அவற்றில் கிட்டத்தட்ட 150 மாணவிகளுக்குக் கல்வியறிவை ஊட்டத்தொடங்கி இருந்தார்கள் சாவித்ரி மற்றும் ஜோதிராவ்.
ஒடுக்கப்பட்ட மக்கள், அதிலும் குறிப்பாக பெண்களுக்கான பள்ளிகளை உயர்சாதியினர் உதவி எதுவுமின்றி ஒரு பெண் நடத்துவதா என தினமும் சாவித்ரி பள்ளிக்குச் செல்லும் வழியில் அவர் மேல் கற்கள் வீசப்பட்டன; மாட்டுச் சாணம் கரைத்து ஊற்றப்பட்டது.
பையில் உடுமாற்று சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு பள்ளி செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார் சாவித்ரி. அழுக்கான புடவையைப் பள்ளியில் மாற்றிக் கொள்வார்.
1852 ஜனவரி 14 அன்று `மகிளா சேவா மண்டல்’ என்ற அமைப்பை நிறுவி, அது ஏற்பாடு செய்த தில்-குல் நிகழ்ச்சியில் கணவருடன் கலந்து கொண்டார் சாவித்ரி. இந்த அமைப்பின் கூட்டங்களில் சாதி பேதம் எதுவும் இன்றி அனைத்துப் பெண்களும் பாய்களில் ஒன்றாக அமர்ந்து விவாதித்து வந்தனர்.
பெண் சிசுக்கொலையைத் தடுக்க, கஞ்ச் பேத்தில் உள்ள தன் வீட்டிலேயே கைவிடப்பட்ட சிசுக்களுக்கு `பால்ஹத்தியா பிரதிபந்தக் கிருஹம்’ என்ற இல்லம் ஒன்றை அமைத்தார். தங்களுக்குக் குழந்தை இல்லாத காரணத்தால், அதே இல்லத்தில், கைவிடப்பட்ட `யஷ்வந்த்’ என்ற குழந்தையைத் தத்தெடுத்தனர் தம்பதி.
1890-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்தார் ஜோதிராவ். அதன்பின் நடைபெற்ற சத்யசோதக சமாஜத்தின் கூட்டங்கள் அனைத்தும் சாவித்ரியின் தலைமையில் நடைபெற்றன. தன் சொந்த சோகம் சமூகப்பணியை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொண்டார் சாவித்ரி.
1897-ம் ஆண்டு கொடிய பிளேக் நோய் மகாராஷ்டிரத்தைத் தாக்கியது. இரண்டு ஆண்டுகள் நோய் மீட்புப் பணியைச் செய்து வந்தார் சாவித்ரி. சாவித்ரியையும் பிளேக் இறுகப் பற்றிக்கொண்டது. சிகிச்சை பலனின்றி 1897-ம் ஆண்டு மார்ச் 10 அன்று மரணமடைந்தார் சாவித்ரி.
ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியாவில் எழுந்த முதல் பெண்ணின் கலகக் குரல் சாவித்ரியின் குரலே. `விழி; எழு; கற்பி, தளைகளை உடை; விடுவி’ என்ற அவரது போர்க்குரல் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!