விருதுநகர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேவை, திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப்பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து ரயில் பயணிகள் வசதிகளுக்கான கலந்தாய்வு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிகளுக்கான கலந்தாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர், விளக்கு, மின் விசிறி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ராஜபாளையம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் குறித்தும், தினசரி ரயில் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து நிலைய அலுவலர்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பயணிகளுக்கான வசதி குறைபாடுகள், எதிர்கால தேவைகள், ரயில் நிலையத்தில் செய்யப்பட வேண்டிய மேம்பாட்டு வசதிகள் குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர், ஆய்வு குழுவினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து கலந்தாய்வுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தென்னக ரயில்வேக்கு என்.எல்.சி. மூலம் சுமார் 40 கோடி ரூபாய் மேம்பாட்டு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. மூலம் வழங்கப்பட்ட அந்த நிதி ரயில்நிலைய மேம்பாட்டிற்காக முறையாக பயன்படுத்தப்படவில்லை.

ஆய்வுக்குழுவினர்

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஆய்வில் பல்வேறு இடங்களில் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என தெரியவந்துள்ளது. ராஜபாளையம் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் சிறிய அளவில் மேற்கூரை அமைக்கப்படும். அடுத்த ஆறு மாதத்திற்குள் ராஜபாளையம் நிலையத்தில் இரண்டு மின்தூக்கிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதிகாரிகளின் இந்த ஆய்வுக்குறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவிக்கையில், “ஆய்வு தொடர்பாக, ரயில் பயணிகள் சங்கத்துக்கோ, வியாபாரிகள் சங்கத்தினருக்கோ முறையான தகவல் தெரிவிக்கவில்லை. அதேசமயம் நாங்களும் ஆய்வில் ஒரு அங்கமாக கலந்துக்கொள்ள அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்” என ரயில் பயணிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.