ராணிப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `அரசு வேலைவாங்கித் தருவதாக் கூறி இடைத்தரகர் அனிபா மற்றும் சிலர் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக வேலைப்பார்த்த ரவி என்பவரை அறிமுகம் செய்துவைத்தனர். அவர், தனக்கு எல்லா துறைகளின் அமைச்சர்களையும் தெரியும். அதனால் எளிதாக அரசு வேலை வாங்கித் தருகிறேன் என உறுதியளித்தார். பின்னர் என்னை நம்ப வைத்து 11 லட்சம் செலவாகும் என ரவி தெரிவித்தார். அதை நம்பி பணம் கொடுத்தேன்.
ஆனால் எனக்கு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தார். எனவே என்னை நம்ப வைத்து பணத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் முன்னாள் அமைச்சரிடம் உதவியாளராக இருந்த ரவி மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவரின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், “கைதான ரவி, தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவருக்கு உதவியாளராக இருந்தவர். இவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இவருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார், யாரென்றும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.