ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைப்பெற இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரசாரங்கள் படுஜோராக நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணியோடு பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், இறுதி நாளான, இன்று ஈரோட்டில் பிரசாரம் செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிறார்.
அதேவேளையில், பிரதான கட்சிகளாக வலம் வரும் திமுக, அதிமுக இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு பரிசுகள், பணம் வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, குக்கர், காமாட்சி விளக்கு, கொலுசு, ஸ்மார்ட் வாட்ச், இன்பச்சுற்றுலா என குவிகிறது ஈரோடு தொகுதியில் என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கபட்டு, தேர்தல் தள்ளிப்போகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், தபால் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு, 438 வாக்குகள் பதியப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 688 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில், சட்டவிரோதமாக மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டதாக 547 வழக்குகள் “தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்” (Tamilnadu Prohibition Act) கீழ் பதியப்பட்டுள்ளது. தற்போது வரை 51.31 லட்சம், 11.68 மதிப்பிலான மதுபொருட்கள் என மொத்தமாக 64.3 லட்சம் பிடிப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். மேலும், பணபட்டுவாடா தொடர்பாக மக்கள் விஜில் ஆப் வாயிலாக தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மாவட்ட அளவில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது வரை 2 புகார்கள் மட்டுமே அதன் வாயிலாகப் பெறப்பப்பட்டுள்ளது.
மேலும், 1430 இ.வி.எம்(Electronic Voting Machine) மற்றும் 310 வி.வி.பேட்( Voter verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் தயார்நிலையில் இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில், 238 பூத் அமைக்கப்பட்டுள்ளது. 32 தேர்தல் மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த மையங்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். மாவட்ட காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்த இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.