பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். 1999 யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தாய்மொழி தினம் வருடாவருடம் உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டு வருகிறது .
வங்கதேசத்தில் தங்கள் மொழிக்காகப் போராடி உயிர்நீத்த வங்காளிகளை நினைவுகூரும் வகையிலும், மொழிரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும், பல்மொழி வழிக் கல்விக்காகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
மொழி, தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பதே உண்மை.
தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை; ஓர் இனத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை, சிந்தனை எல்லாவற்றிலும் நீங்காத அங்கமாக இருக்கும் சிறப்பு, மொழிக்கு உண்டு.
அன்னை மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுகிறோம் என்பது வருத்தமானது.
அந்தக் காலகட்டத்தில், திருவல்லிக்கேணி கூட்டத்தில், நம்மை அடிமைப்படுத்தியிருந்த அந்நியரின் மொழியான ஆங்கிலத்தில் காந்தி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு ஒரு கடிதம் எழுதினார் பாரதி. “உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ, ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பினார்,
“இனிமேல் அவ்வாறே செய்கிறேன். நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள்?” என பாரதியிடம் காந்தி கேட்டார்.
“பிறர் மனம் நோக எழுதும்போது அன்னை மொழியை உபயோகப்படுத்தக்கூடாது என்பதே எங்களின் பண்பாடு’’ என்று பதில் தந்தார் பாரதி. தாய்மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி என்றார் பாரதி .