கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப் பட்டது. பலரும் தங்கள் இணையர்களுக்கு சர்ப்ரைஸ்கள் வழங்கி ஆச்சர்யப்படுத்தினர்.
அந்தவகையில் தாய்லாந்தைச் சேர்ந்த Vall என்ற நபர் காதலர் தினத்தை முன்னிட்டு தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாகக், கையில் திருமணச் சான்றிதழை டாட்டூவாகக் குத்திக்கொண்டுள்ளார். இதனைப் பார்த்த மனைவி ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளார். தன் மனைவி மீதான காதலால் மத்திய தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தில் உள்ள கேங் கோய் என்ற பகுதியில் உள்ள டாட்டூ கடையில் 8 மணிநேரம் செலவழித்து இந்த டாட்டூவைக் குத்திக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அந்த டாட்டூ கலைஞர் கூறும்போது, “இதுவரை நான் 8 மணி நேரமெல்லாம் டாட்டூ போட்டதே இல்லை. அதிலும் குறிப்பாக திருமணச் சான்றிதழ் எல்லாம் வரைந்ததில்லை. இது முதல் முறை என்பதால் சற்று கடினமாகத்தான் இருந்தது. முழு சான்றிதழையும் சாதாரண மையால் முதலில் அச்சு எடுத்துக்கொண்டு பின் டாட்டூ துப்பாக்கி மூலம் வரைந்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.