மும்பையைச் சேர்ந்த ஐடி இன்ஜினீயர் ஒருவர் எந்த வகையில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்பது குறித்து இண்டர்நெட்டில் தேடினார். அவர் தற்கொலைக்கான வழிகள் குறித்து தேடுவதை அமெரிக்காவிலிருந்து தேசிய மத்திய புலனாய்வுத்துறை கண்டுபிடித்தது. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த அமெரிக்க தேசிய மத்திய புலனாய்வுத்துறை உடனே இது குறித்து டெல்லியில் உள்ள இண்டர்போலுக்கு தகவல் கொடுத்தனர். இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்து மும்பை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மும்பை போலீஸார் நேரத்தை வீணாக்காமல் விரைந்து காரியத்தில் இறங்கினர். குற்றப்பிரிவு போலீஸார் தற்கொலைக்கு முயற்சி செய்யும் நபர் எங்கு இருக்கிறார் என்பதை அவரின் சோஷியல் மீடியா கணக்கு மூலம் தெரிந்து கொள்ள முயன்றனர். இதில் அவர் குர்லா பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனே விரைந்து செயல்பட்ட போலீஸார் அவரை கண்டுபிடித்து மீட்டனர்.
அவரிடம் விசாரித்த போது அவர், ஒரு ஐடி இன்ஜினீயர் குறைவான சம்பளத்தில் வேலை செய்ததால் அவரால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. படிக்க அதிக அளவில் கடன் பெற்று இருப்பதும், அதனை திரும்ப கொடுக்க முடியாமலும் சிரமப்பட்டதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதற்கு முன்பும் 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் அஜித் கோண்டி தலைமையிலான குழுவினர் ஐடி இன்ஜினீயர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு மீட்டனர்.
போலீஸார் சம்பந்தப்பட்ட இன்ஜினீயரின் குடும்பத்தை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். தன் மகனின் உயிரை காப்பாற்றியதற்காக மும்பை போலீஸாருக்கு ஐடி இன்ஜினீயரின் தாயார் நன்றி தெரிவித்தார். ஐடி துறையில் தற்போது பெரிய அளவில் சரிவு காணப்படுகிறது.
அமெரிக்காவில் ஐடி இன்ஜினீயர்கள் லட்சக்கணக்கானோர் வேலையை இழந்திருக்கின்றனர். கூகுள், யாகூ போன்ற ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் ஐடி ஊழியர்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.