கோவை நீதிமன்ற வளாகம் அருகே நேற்று காலை கோகுல் என்ற இளைஞர் ஒரு கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் கடந்த 2021-ம் ஆண்டு குரங்கு ஶ்ரீராம் என்ற இளைஞரின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஆவார். ஜாமீனில் இருந்த அவர், நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது.
அவருடன் வந்த அவரின் நண்பரான சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் என்பவரையும் அந்தக் கும்பல் தாக்கியது.
கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனோஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் இந்தச் சம்பவத்தை செய்துவிட்டு, கொலையாளிகள் பந்தாவாக பைக்கில் ஏறி சென்றனர். இது குறித்து போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்த மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவரின் செல்போன் சிக்னல் நீலகிரியில் பதிவானது. இதையடுத்து நீலகிரியில் தீவிர வாகனச்சோதனை நடத்தப்பட்டது.
கோத்தகிரியில் நடந்த வாகனச்சோதனையில் தலைமறைவாக இருந்த ஒன்றரை கௌதம் என்கிற கௌதம், ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி ஆகியோர் பேர் சிக்கினர்.
குன்னூரிலிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்ற மேலும் இரண்டு பேரை போலீஸ் தேடி வருகின்றனர். போலீஸார் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவிருக்கின்றனர்.