ஜப்பானில் LGBTQ சமூகத்துக்கு எதிராகத் தனது கருத்தை வெளிப்படுத்திய மசயோஷி ஆரை (Masayoshi Arai) என்ற முக்கிய அரசாங்க அதிகாரி ஒருவரை, அந்த நாட்டுப் பிரதமர் ஃப்யூமியோ கிஷிதா (Fumio Kishida) வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.
துருக்கியைச் சேர்ந்த 22 வயது யூடியூப் நட்சத்திரமான Tiba al-Ali இராக்கில் அவருடைய தந்தையால் ஆணவக் கொலைசெய்யப்பட்டார். இதை அந்த நாட்டு உள்துறை அமைச்சர் சாத் மான் ட்விட்டரில் தெரிவித்தார்.
சிலி நாட்டின் வனப்பகுதிகளில் ஆங்காங்கே ஏற்பட்ட காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக அதிகரித்திருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் பறந்த சீன உளவு பலூனை கரோலினா கடற்கரையிலிருந்து அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தின. இதையடுத்து, அமெரிக்காவில் மூன்று விமான நிலையங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டன.
உக்ரைனில் Chris Parry (28), Andrew Bagshaw (47) ஆகிய இரண்டு பிரிட்டிஷ் தன்னார்வலர்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டனர். இது ரஷ்யாவுடனான கைதிகள் பரிமாற்றத்தின்போது கண்டறியப்பட்டது. அவர்களின் சடலங்கள் பிரிட்டன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதம் சார்ந்த சில தரவுகளை அகற்றக் கோரி பாகிஸ்தானில் விக்கிப்பீடியா தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. இஸ்லாத்துக்கு எதிரான தரவுகளை நீக்க 48 மணி நேர காலக்கெடு கொடுக்கப்பட்டிருப்பதாக, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
65-வது கிராமி விருதுகள் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்கிறது. அமெரிக்கப் பாடகர் Beyoncé ஒன்பது நாமிநேஷன்களோடு முன்னணியில் நிற்கிறார். இந்த ஆண்டும் காமெடியன் Trevor Noah இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் 16 வயது சிறுமி, சுறா தாக்கி கொடூரமாகக் கொல்லப்பட்டார். சிறுமி யார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கனடாவைச் சேர்ந்த ஜூலியட் லாமோர் என்ற 18 வயது பெண் தன் முதல் முயற்சியிலே ஜாக்பாட் அடித்து லாட்டரி வென்றிருக்கிறார். இதில் 48 மில்லியன் டாலர் பரிசை வென்ற கனடாவின் முதல் டீனேஜ் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதன் ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மார்ச் மாதத்தில் ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை வெற்றிகரமாக முடிந்தால் மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். அவருக்கு வயது 79.