தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தன்னுடைய டிசம்பர் காலான்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2022-23 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 38 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.
2021 டிசம்பர் காலாண்டில் ரூ.202.88 கோடியாக இருந்த இதன் நிகர லாபம் 2022 டிசம்பர் காலாண்டில் 279.70 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர வட்டி வருமானம் 18 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் ரூ.452.76 கோடியாக இருந்தது, 2022 டிசம்பர் காலாண்டில் ரூ.534.27 கோடியாக வளர்ச்சி கண்டிருக்கிறது.
அதேபோல் வங்கியின் மொத்த வாராக்கடன் வெகுவாகக் குறைந்துள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் 985.56 கோடியாக இருந்த மொத்த வாராக்கடன், 2022 டிசம்பர் காலாண்டில் ரூ. 591.08 கோடியாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக வங்கியின் வணிகம் 2022-23 நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டில் 5.69 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ரூ.78,242 கோடியை எட்டியிருக்கிறது.
வங்கியின் வைப்புத் தொகை மதிப்பு ரூ. 43,440 கோடியை எட்டியிருக்கிறது. வங்கியின் கடன் புத்தக மதிப்பு ரூ 34,802 கோடியாக இருக்கிறது. வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குத் தொகையானது (CASA) ரூ12,851 கோடியாக இருக்கிறது.
1921-ல் தொடங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வங்கித் துறையில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்த வங்கிக்கு 511 கிளைகள் உள்ளன. 12 மண்டல அலுவலகங்களுடன் 16 மாநிலங்களிலும், 4 யூனியன் பிரதேசங்களிலும் 5 மில்லியனுக்கும் மேலான வாடிக்கையாளர்களுடன் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது.