கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அனுமன் தீர்த்தம் பகுதியில், திருபத்துாரைச் சேர்ந்த சேகர் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். ‘ஸ்ரீ விக்னேஸ்வர்’ எனப்பெயர் கொண்ட இந்த நகைக்கடையை, நேற்று இரவு வழக்கம் போல பூட்டிவிட்டு, திருப்பத்துார் சென்றிருந்தார். இந்த நிலையில், இன்று காலை அருகிலுள்ள கடைக்காரர்கள் மற்றும் அங்குள்ள மக்கள், நகைக்கடை சுவற்றில் துளையிடப்பட்டிருப்பதாக, சேகருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த சேகர் கடைக்கு வந்த பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு கடையிலிருந்த, வளையல்கள், செயின் உட்பட, 25 கிலோ அளவுக்கான வெள்ளி நகைகள் மற்றும் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர். மேலும், சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு, நகைகளை திருடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள கடையிலேயே திருட்டு சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் குறித்து ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் அன்பழகனிடம் விசாரித்தோம். ‘‘திருட்டு சம்பவம் நிகழ்ந்த கடை, மெயின் ரோட்டில் உள்ளது. கடையின் பின்பக்கம் சிறு சிறிய தெருக்கள் இருப்பதால், இந்த தெரு வழியாக வந்த கொள்ளையர்கள், ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவற்றில் துளையிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் செண்டிருக்கின்றனர். தடயங்கள் சேகரித்து, கொள்ளையர்களை தேடி வருகிறோம்’’ என்றார்.