ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிழந்ததன் காரணமாக, தற்போது காலியாக இருக்கும் அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ல் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துகிறது. அதேசமயம், அ.தி.மு.க கூட்டணி சார்பில் அ.தி.மு.க-வே வேட்பாளரை நிறுத்தவிருக்கிறது. இருப்பினும் இருதரப்பிலிருந்தும் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை, அ.தி.மு.க தரப்பில் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உட்பட பலர் நேற்று சந்தித்தனர். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அண்ணாமலையை சந்தித்தார். அரசியல் வட்டாரங்களில் இது பேசுபொருளான நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர், இந்திய மக்கள் கல்வி கழகத்தின் தலைவர் தேவநாதனுடன் இன்று சந்திப்பு நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம்-அண்ணாமலை சந்திப்பு சந்திப்பு குறித்துப் பேசிய ஜெயக்குமார், “இந்தியா ஒரு சுதந்திர நாடு. பாஸ்போர்ட் தேவையில்லை. எந்த ஸ்டேட்டுக்கு எப்ப வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் போகலாம். அதனால அவர் பீகார் போகட்டும், ஒடிசா போகட்டும், மேற்கு வங்கம் போகட்டும், எங்கே வேண்டுமானாலும் போகட்டும். அவர் போறத பத்தி ஏன் என்கிட்ட கேக்குறீங்க. அவர் ஏன் போனார்-னு அவர்கிட்ட கேளுங்க.
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றைக்கு அ.தி.மு.க சீரும் சிறப்புமாக எழுச்சியோடு இருக்கின்ற நிலையில், எப்படி அவர் அ.தி.மு.க என்று சொல்ல முடியும். சட்டரீதியாகவும் அது தவறு. அ.தி.மு.க-வை சிறுமைப்படுத்தவேண்டும், தொந்தரவு கொடுக்க வேண்டும் என்ற வகையில், தி.மு.க-வின் பி டீமாகத்தான் அவருடைய செயல்பாடு இருப்பதாக தொண்டர்கள் முழுமையாக நினைக்கின்ற சூழ்நிலையில் அவர் இருக்கிறார்.
இந்த தேர்தலில் போட்டியிட்டால் சுயேச்சை வேட்பாளராகத்தான் தமிழ்நாட்டு மக்கள் கருதுவார்கள், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கருதுவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர் ரொம்ப கீழ போயிட்டாரு. இந்த தேர்தலோடு அவருடைய கதை முடிகிற அளவுக்குத்தான் இருக்கும். நோட்டாவுக்கு கீழே போயிடுவார். தேர்தலில் சட்டப்படி ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்து போடும் அதிகாரமே எடப்பாடி பழனிசாமிக்குத்தான் உண்டு” என்றார்.