என் மாமனார் இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் இருந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த தொழிலை என் கணவரும் அவர் அண்ணனும் செய்து வந்தனர். தொழில் நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள், கணவரின் அண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள். அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே குடும்பத்தில் வசித்துவந்தோம்.
என் கணவருக்கும் அவர் அண்ணனுக்கும் 10 வருடங்கள் வித்தியாசம் என்பதால், என் கணவர் அவரிடம் எப்போதும் மிகுந்த மரியாதையுடன் இருப்பார். எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டார். தொழிலில் அண்ணன் பண விஷயங்களை கவனித்துக்கொள்ளும் முதலாளி போலவும், என் கணவர் வேலை தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொள்ளும் பணியாளர் போலவும்தான் இருப்பார்கள். இந்நிலையில், எனக்கும் என் கணவருக்கும் இடையில் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டன. விரைவில் சமாதானம் ஆனாலும் சில நாள்களிலேயே மீண்டும் எங்களுக்குள் சண்டை வரும். இதனால், என் கணவர் மதுப்பழக்கம் பழக ஆரம்பித்தார்.
என் கணவரின் அண்ணனும், அண்ணியும் என் கணவரை உருப்படாதவன் என்று பேச ஆரம்பித்ததுடன், உறவினர்கள், ஊரிடமும் அதையே சொல்ல ஆரம்பித்தனர். ஒரு வகையில், நான் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டதுதான் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளி என்பதால், நான் அவரிடம் சண்டை போடுவதை சுத்தமாக நிறுத்துவிட்டேன். ஆனால், மதுப்பழக்கத்திடமிருந்து அவரை விலக்க முடியவில்லை.
இந்நிலையில், எங்கள் கடையில் யாரும் எதிர்பாராத வகையில் 4 லட்சம் ரூபாய் சரக்கு களவு போனது. நாங்கள் அதிர்ந்துபோய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனாலும், திருடர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், ஒரு கட்டத்தில் திடீரென என் கணவரின் அண்ணன், என் கணவர்தான் அந்த சரக்கை தானே ஆள் வைத்துத் திருடியதாகக் கூற ஆரம்பித்தார். நாங்கள் அதிர்ந்துவிட்டோம். என்னதான் என் கணவர் குடிப்பழக்கம் பழகியிருக்கிறார் என்றாலும், திருட்டு, அதிலும் தன் சொந்த வீட்டிலேயே செய்வாரா? ஏன் என் கணவரின் அண்ணன், தன் தம்பி என்றும் பார்க்காமல் அவர் மேல் இப்படி ஒரு பழி போட்டார் என்று புரியவில்லை.
என் கணவர் அது குறித்து தன் அண்ணிடம் கேட்டபோது, ’உன் போக்கே இப்போ சரியில்லையே. நீதான் செஞ்சிருப்ப’ என்று ஒரு குற்றவாளியைப் பேசுவது போல் பேசினார். ஆனால் என் கணவரோ, அண்ணன் மேல் காட்ட வேண்டிய நியாயமான கோபத்தை காட்டாமல், ‘நீ என்னை இப்படி நினைக்கலாமாண்ணே…’ என்ற ரீதியிலேயே விளக்கம் அளித்தார். ஆனால் என்னால் அப்படி என் கணவர் போல பொறுமையாக இருக்க முடியவில்லை. அவர் அண்ணனிடமும் அண்ணியிடமும் சண்டை போட்டேன். அதனால் ஏற்பட்ட வாக்குவாதங்கள், பிரச்னைகளால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாங்கள் தனிக்குடித்தனங்களாகப் பிரிந்தோம்.
இந்தத் திருட்டுப் பழியை சாக்காக வைத்து, என் கணவரின் அண்ணன் என் கணவரை எங்கள் குடும்பத் தொழிலில் இருந்து வெளியேற்றிவிட்டார். எங்களுக்கு உள்ள பங்கை பிரித்துக்கொடுத்து, தொழிலை முழுமையாக அவர் கைப்பற்றிக்கொண்டார். சொல்லப்போனால், இந்த எண்ணத்தில்தான் என் கணவர் மீது அவர் திருட்டிப்பழியே சுமத்தியிருக்கிறார். ஆனால், இவற்றுக்கெல்லாம் என் கணவர் தன் அண்ணனிடம் இதுவரை உரிய எதிர்வினை காட்டவில்லை என்பதே எல்லாவற்றையும்விட எனக்கு வருத்தமாக இருக்கிறது. ’தம்பி தப்பு செஞ்சா திருத்தி வழிக்குக் கொண்டு வர்றவங்கதான் அண்ணன். இப்படி சந்தர்ப்பம் பார்த்து திருட்டுப் பழி சொல்லி தொழிலை அபகரிச்சுக்கிட்டாரே உங்க அண்ணன்’ என்று வெளிப்படையாகப் புரியும்படி என் கணவரிடம் சொன்னாலும், ‘அதுக்காக எங்க அண்ணன்கிட்ட போய் என்னை பங்காளி சண்டை போட சொல்றியா? எங்க அண்ணன்தானே என்னைத் திருடன்னு சொல்றார், சொல்லிட்டுப்போறார். அவர் எனக்கு அப்பா மாதிரி. சீக்கிரமே நாங்க சமாதானமாகிடுவோம்’ என்று பாசத்துக்காகப் பழி சுமக்கிறார்.
தன் அண்ணனுக்காக என் கணவர் அமைதியாக இருக்கலாம். ஆனால், என்னைப் பற்றியும் என் பிள்ளைகளையும் பற்றியும் இவர் யோசிக்கவில்லை. இவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் பழி, எங்களை எந்தளவுக்கு பாதிக்கும், அவமானம் தரும், அழுக வைக்கும்? என் கணவருக்கு எப்படி புரியவைப்பது? இந்த துரோகத்துக்கான தண்டனையை அவர் அண்ணனுக்கு எப்படித் தருவது?