நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். லேபர் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 2017-ல் அமைந்த கூட்டணி ஆட்சியில் தனது 37-வது வயதில் பிரதமராக பதவியேற்றார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் அவரின் தலைமையிலான கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பிரதமராக செயல்பட்டு வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசு கொரோனா பரவல், பொருளாதார இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்டது. மேலும் வெளிநாடுகளுடன் நல்ல உறவை பேணிக் காத்து வந்தது.
இந்த ஆண்டு நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தான் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லேபர் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய ஜெசிந்தா ஆர்டெர்ன், “இந்த பதவி குறித்து நான் நன்கு அறிவேன்.
இனி இதை தொடர என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என உணர்கிறேன். நான் பதவி விலகுவதற்கான சரியான நேரம் இதுதான் என நினைக்கிறேன். நான் பதவியிலிருந்து வெளியேறாவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மால் வெற்றி பெற முடியாது என நம்புகிறேன். இனிவரும் தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பின் மூலம் பிப்ரவரி 7-ம் தேதிக்கு பிறகு அவரின் ராஜினாமா நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜனவரி 22 லேபர் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறலாம் என்றும், இதையடுத்து இடைக்கால பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.