‘எதிர்பாராததையும் எதிர்பாருங்கள்’ என்கிற தாரக மந்திரத்தை மெய்ப்பித்து விட்டார் பிக் பாஸ். ஆம், பணப்பெட்டி டாஸ்க் கதிரவனோடு முடிந்து விட்டது போல என்று எண்ணிக் கொண்டிருந்தால், மூட்டை போய் பெட்டி வந்திருக்கிறது. இந்த இரண்டாவது வாய்ப்பில் பணத்தை எடுக்கப்போவது யார்? மைனாவா.. அமுதுவா.. அல்லது தொகை கணிசமாக உயரும் பட்சத்தில் வேறு ஏதேனும் திருப்பம் காத்திருக்கிறதா?

ரச்சிதா

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

“நம்மை ஆதரிக்கற மக்கள் ஆரம்பத்துல கொஞ்சமாத்தான் இருப்பாங்க. ஆனா தொடர்ந்து வந்துட்டே இருப்பாங்க. மக்கள் புத்திசாலிகள். ஆட்களை அடையாளம் காண அவர்களுக்குத் தெரியும். ஒருத்தர் ஒருத்தரை மதிக்கணும்ன்றதுதான் அடிப்படை. ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ன்றதுதான் நம்ம பண்பாடு” என்று நள்ளிரவிலும் விழிப்பாக அரசியல் பேசிக் கொண்டிருந்தார் விக்ரமன். ஆம், ‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான், அயலானே’ என்கிற கோஷத்திற்கு எதிர்வினை ‘யாவரும் கேளிர்தான்’. அதுதான் தமிழர் கலாசாரம். ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்கிற பெருமிதம் அப்படித்தான் உருவானது.

நாள் 101 விடிந்தது. ‘உரசாதே’ என்கிற பாடல் ஒலிக்க, நடனமாடிக் கொண்டிருந்த ரச்சிதாவை பாசத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராபர்ட். கதிரவன் சட்டென்று வெளியேறியதைப் பற்றி ஆங்காங்கே ஆச்சரியத்துடனும் அதிருப்தியுடனும் மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அந்தக் குழந்தையே அசிம்தான்’ – நட்பில் உருகிய சாந்தி

‘நட்பிற்கு எல்லையில்லை.. புதிதாக ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்’ என்று ‘கட்டிப்பிடி வைத்திய’ டாஸ்க்கை பிக் பாஸ் ஆரம்பித்து வைத்தார். (இத்தனை நாள் கலவரம் ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துட்டு முடியும் போது நல்ல பெயரை வாங்கிக் கொள்ளப் பார்க்கிறாரா. பிக்பாஸ்?!) என்றாலும் அதுவரை தங்கள் மனதில் உள்ளவைகளை அழித்து விட்டு ஒரு புதிய ஆரம்பத்தை மக்கள் ஏற்படுத்த முனைந்தது நல்லதுதான். ஆனால் இதில் உண்மையாகவே நட்புணர்ச்சி ஆரம்பித்ததா அல்லது ஆதரவு நிறைய உள்ள போட்டியாளரை நாமும் ஆதரித்து வைப்போம் என்கிற ஆதாய நோக்கமா என்று தெரியவில்லை.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

“வெளியே போய் பார்த்த போதுதான் அசிம் எவ்வளவு நல்லவருன்னு தெரிஞ்சது’ என்று நட்புக்கரம் நீட்டினார் ஆயிஷா. கோபம் வரும் தருணங்களைத் தவிர இதர நேரங்களில் அசிம் பிரச்சினையில்லாத ஆசாமி என்பது சரிதான். ஆனால் ஒருவரை வீடியோவின் வழியாக பார்ப்பதை விடவும் அவருடன் நேரில் சில நாட்கள் பழகிப்பார்த்தால்தான் அவருடைய நிறைகளும் குறைகளும் பளிச்சென தெரியும் என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் இவர்கள் சொல்வது தலைகீழாக இருக்கிறது. வீட்டில் பழகி விட்டு, வெளியே சென்று வீடியோவில் பார்த்தபின்புதான் ‘நல்லவர்’ என்று புரிகிறது என்று சொல்வது முரண். அசிமிற்கு ஆதரவு கூடியிருப்பதால் வந்த மாற்றமா இது? அல்லது இவர்கள் வீட்டில் பார்க்க முடியாத கோணங்களை வீடியோ வெளிப்படுத்தியதால் வந்த மாற்றமா?

ஆயிஷா, நிவா

இந்த வரிசையில், இரண்டாவது முறையாக உள்ளே வந்தும் அசிமுடன் மோதல் ஏற்பட்டது மகேஸ்வரிக்குத்தான். அவரும் அசிமிற்கு நட்புக்கரம் நீட்டியது நல்ல விஷயம். ‘பச்சைப் பிள்ளை’ என்று பாசத்துடன் அசிமிற்கு பிரெண்ட்ஷிப் கயிறு கட்டினார் சாந்தி. ‘விக்ரமனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருந்தது’ என்று ஆச்சரியப்படுத்தினார் முத்து. (அப்படி என்ன கருத்து மோதல் நடந்திருக்கும்?!) ஷெரினாவும் தனலஷ்மியும் விக்ரமனுக்கு நட்புக் கொடி காட்டினார்கள். “எனக்கு யாருமே கட்டலை” என்று மைனா சொல்லியது அவருக்கான பிளஸ் பாயிண்ட். யாருக்கும் அவர் மேல் விரோதம் இல்லை என்பது பாசிட்டிவ்வான பொருள்.

‘ராபர்ட் மாஸ்டரும் ஒரு குழந்தைதான்’ – பாசம் காட்டிய ரச்சிதா

அடுத்ததாக நட்பைப் புதுப்பிப்பதா அல்லது மன்னிப்பு கேட்பதா என்பதே புரியாமல் கலந்து கட்டிய டாஸ்க்கில் “நான் individual player-ன்னு நெனச்சேன்.. அப்படித்தான் ஆடினேன். ஆனா யாரையாவது காயப்படுத்தியிருந்தா மன்னிச்சுடுங்க. நான் தனியா இருந்து பழகிட்டேன். ஸாரி’ என்று மெலிதாகக் கண்கலங்கினார் அசிம். “கோபப்படற அசிம் மட்டும் வேணாம். மத்தபடி ஐ லவ் யூங்க” என்றார் மைனா. தன்னுடைய தோழியாக ஷிவினின் பெயரை மைனா சொல்ல “ஹலோவ் நான் உன் பிரெண்டு இல்ல’ என்று பதிலுக்கு ஷிவின் சொன்னது குறும்பு. (யோகிக்குத்தான் பிரெண்டாம்!). “ராபர்ட் மாஸ்டர் என்னிக்குமே எனக்கு பிரச்சினையா இருந்ததில்ல. அவரை குழந்தையாத்தான் பார்க்கறேன்” என்று ரச்சிதா சொன்னது க்யூட். ஒரு சங்கடத்தை நேர்த்தியாக கையாளும் டெக்னிக் இது.

ராம், ஷிவின், ரச்சிதா

மணிகண்டன் மற்றும் தனலஷ்மியின் நேரம் முடிந்ததாகச் சொல்லி அவர்களை முதல் இன்ஸ்டால்மென்ட்டில் வெளியே அனுப்பினார் பிக் பாஸ். (மளிகைச் செலவு அதிகமாகுது தம்பிங்களா!). ‘யாரு ஜெயிச்சாலும் எங்களுக்கு சந்தோஷம். ஆல் தி பெஸ்ட்’ என்கிற சம்பிரதாயமான சொற்களுடன் அவர்கள் விடைபெற்றார்கள். முத்துவை ரொமான்டிக் ஹீரோவாகவும் ரச்சிதாவை ஹீரோயினாகவும் வைத்து ஒரு நாடகத்தை ஆரம்பித்து நேரத்தைக் கடத்த முயன்றார்கள். எம்.ஜி.ஆர் போல் உதட்டைக் கடித்துக் கொண்டு ரச்சிதாவை நெருங்கினார் முத்து. ரொமான்டிக் லுக்கை அவர் தர விரும்பினாலும் ‘வேறு ஒரு’ லுக்தான் வந்தது. “அப்படியே பக்கத்துல போறீங்க சார். உத்துப் பார்த்தா அது உங்க தங்கச்சி” என்று அதுவரை முத்துவிடம் பொங்கிக் கொண்டிருந்த ரொமான்ஸில் கருணையே இல்லாமல் சட்டென்று தண்ணீர் ஊற்றி அணைத்தார் சாந்தி.

‘மூட்டை போயி பெட்டி வந்தது.. டும்.. டும்.. டும்.’

திடீரென மக்களுக்கு ஒரு டிவிஸ்ட்டை அறிவித்தார் பிக் பாஸ். நேத்து கதிரவன் எடுத்துச் சென்றது பண மூட்டை. ஆனால் இந்த முறை வந்திருப்பது பணப்பெட்டி இந்த சீசனின் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது முறையாக பணம் எடுக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதன் ஆரம்ப விலை மூன்று லட்சம்… தொகை ஏறிக் கொண்டே செல்லும்.. இதை எடுக்கப் போகும் அதிர்ஷ்டசாலி யார்?” என்று அறிவிப்பு வந்ததும், மக்களுக்கு சந்தோஷமும் குழப்பமும் கலந்து வந்தது. ஒருவழியாக முடிந்தது என்று பார்த்தால் மீண்டுமா?! “இதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை” என்று ஓரக்கண்ணால், அரைமனதாக பெட்டியைப் பார்த்தபடியே விலகினார் மைனா. கடைசியில் மைனாதான் பெட்டியை எடுக்கப் போகிறார் என்று தோன்றுகிறது.

மைனா

வீட்டில் முட்டை காலியாகி விட்டது போல. “முட்டை கேளுங்க” என்று அசிம் சொல்ல “பார்த்தீங்களா. பார்த்தீங்களா. இதுக்குத்தான் சொன்னேன்.. ரச்சிதா, ஆயிஷா.. ஜனனில்லாம் வருவாங்கன்னுதான் முட்டையை எடுத்து வெச்சேன். அதுக்கு என்னென்ன நியாயமெல்லாம் பேசினீங்கடா யப்பா.. இப்ப முட்டை இல்லை.. வாங்கிக் கொடுங்க” என்று முத்துவைப் போட்டு இம்சை செய்து கொண்டிருந்தார் அமுதவாணன். “இப்பத்தானே இந்தக் காரணமெல்லாம் சொல்றே?” என்று முத்து மடக்கினார். அமுதுவிற்கு இந்த ஐடியா லேட்டாக வந்திருக்கும் போல.

பணப்பெட்டி

“எவ்வளவு அமௌண்ட் வந்தா எடுக்கறதுக்கு யோசனை வரும்?” என்கிற ஒரு சுவாரசிய ஆட்டத்தை ஆடும் உற்சாகத்துடன் வந்தார் மகேஸ்வரி. ஆனால் அசிம் இதை ரசிக்கவில்லை. “நான் உங்க கிட்ட எல்லாம் கேப்பனா.. நீங்கள்லாம் யாரு?” என்று பம்மி விலகினார். 25 லட்சம் வரைக்கும் போனால் மைனாவிற்கு ஐடியா இருக்கிறதாம். (அவ்வளவெல்லாம் போகுமா என்ன?!) ‘இருபது ரூ வந்தால் ஒரு ஐடியா வரும். ஆனா ஃபைனல் மேடையைப் பார்க்கவும் ஆசை இருக்கு” என்று மதில் மேல் பூனையாக பேசினார் அமுதவாணன். “ஐம்பது லட்சத்துக்கு மேலா வெச்சாக் கூட நான் எடுக்க மாட்டேன்” என்று கெத்தாக பேசினார் அசிம்.

தொகையை உயர்த்தி ஆசை காட்டிய பிக் பாஸ்

பிக் பாஸிற்கும் பொழுது போகவில்லை போல. ‘தொட்டுப் பாரு. என் பேரு’ என்று கண்ணாமூச்சி ஆட்டம் போன்ற ஒன்றை அடுத்ததாக ஆரம்பித்தார். மக்கள் வரிசையாக அமர்ந்திருக்க, ஒருவர் கண்ணை கட்டிக் கொண்டு அனைவரின் தலைமுடியையும் கையையும் மட்டும் தடவிப் பார்த்து யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். இதில் மைனா அனைவரையும் சரியாக கண்டுபிடித்தது ஆச்சரியம். எதிர்பார்த்தது போலவே முத்து பயங்கரமாக சொதப்பினார். இதில் அமுதவாணன் செய்த குறும்புகள் ரசிக்கத்தக்க வகையில் இருந்தன. ஒரு காட்சியை எப்படியாவது சுவாரசியமாக்க வேண்டும் என்கிற துடிப்புள்ளவன்தான் முன்னேற முடியும்.

முத்து, அசிம்

ராபர்ட் மற்றும் முத்துவை அடுத்த தவணையில் வெளியே அனுப்பினார் பிக் பாஸ். (முட்டை செலவு அதிகமாகுது பாஸூ!). ‘அய்யோ. ஒத்தையிலே நான் எப்படி போவேன்?” என்று வயசுப்பெண் போல் பதறினார் முத்து. (ரொம்ப வெள்ளந்தியா வளர்த்து வெச்சிருக்காங்க!) ‘ஸாரி சொன்னேன்னு சொல்லிடுங்க’ என்று ராபர்ட் மாஸ்டரின் காதில் ரகசியம் பேசினார் ஷிவின். பிக் பாஸிடம் வலுக்கட்டாயமாக ‘ஐ லவ் யூ’ வாங்கிக் கொண்டு முத்து கிளம்பினார்.

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ஏலத்தொகை மாறிக் கொண்டேயிருக்க, மக்களின் மனங்களிலும் சஞ்சலம் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. ஷிவின் அதைப் பற்றி பேச “ஏன் நீ எடுக்கப் போறியா?” என்று மக்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ‘ஒருவேளை இரண்டு டைட்டில் தந்தா.. எதிர்பார்க்காத விஷயத்தை செய்யறது.. பிக் பாஸ் ஸ்டைல் அதானே?” என்று அமுதுவிற்கு கோளாறான யோசனை வர “இவன் என்ன. நம்ம இடத்துல வந்து பாயைப் போடறான்” என்பது போல் எரிச்சலாகி ஆட்சேபம் தெரிவித்தார் அசிம்.

நள்ளிரவில் தொகை ஐந்து லட்சமாக உயர்ந்து நின்றிருக்கிறது. கடிகாரம் மேலும் நகரும். ‘வாங்க.. சார்.. வாங்க சார்.. போனா வராது.. பொழுது போனா கெடைக்காது’…

பணப் பெட்டியுடன் வெளியேறப்போவது யார்? என நீங்கள் நினைப்பவரைக் கமென்ட் பண்ணுங்க.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.