பி.எஸ் – 4 வாகனங்களுக்கு தடை:

உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2000-ம் ஆண்டு புதிய கொள்கை ஒன்றை கொண்டு வந்தது. அதுவே பாரத் ஸ்டேஜ்(BS). வாகனங்களில் இருந்து வரும் புகையின் மாசை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த விதிப்படி, BS6 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் தொடர்ந்து இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது. அதையெல்லாம் மீறித்தான் இந்த மோசடி நடந்திருக்கிறது.

மோசடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துத்துறை ஆணையரக வட்டாரங்கள். “2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பி.எஸ் – 4 வகை வாகனங்களைப் பதிவு செய்ய மத்திய அரசு தடை விதித்ததால், அந்த ரக சொகுசு கார்களும், பைக்குகளும் விற்பனையாகாமல் தேங்கிவிட்டன. மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் ‘கூட்டுத் தொகை 8’ என வரும் வாகனப் பதிவெண்களும் அதிக அளவில் தேங்கியிருந்தன.

`காசு மாசுபாடா கிடக்கட்டும்… காசு வருதுல்ல?’

மேலும் 8 என்ற எண்ணை பலரும் ராசியில்லாத எண்ணாகப் பார்த்ததால், சம்பந்தப்பட்ட எண்களை விரும்பிக் கேட்போருக்கு மட்டுமே வழங்குமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பதிவெண்களை தடை செய்யப்பட்ட பி.எஸ் – 4 வாகனங்களுக்கான எண்ணாக முந்தேதியிட்டு முறைகேடாகப் பதிவு செய்திருக்கிறார்கள் சில வாகன விற்பனையாளர்கள்.

நிர்மல்ராஜ்

‘காசு மாசுபாடா கிடக்கட்டும்… காசு வருதுல்ல?’ என இதற்கு ஆர்.டி.ஓ அலுவலக ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். முறைகேட்டை கண்டுபிடித்த அதிகாரிகள், இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் ஒருவர்மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.

டி.ஜி.பி அலுவலகத்திற்கு புகார்:

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் நிர்மல்ராஜிடம் விளக்கம் கேட்டோம். “வளசரவாக்கம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான் இந்த முறைகேடு முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுக்க ஆய்வுசெய்து, மொத்தம் 399 பி.எஸ்-4 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தோம்.

வாகன விற்பனையாளர்கள்தான் இந்த மோசடிக்கு முக்கிய காரணம். ஆனாலும், போக்குவரத்து துறை ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பதால், இதுகுறித்த அறிக்கையை துறை செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் அதை டி.ஜி.பி அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருக்கிறார். கண்டிப்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.