கோவை ஈஷா யோகா மையத்தில், பயிற்சிக்குச் சென்ற சுபஶ்ரீ என்கிற பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை கண்டித்தும், ஈஷாவின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக கூட்டமைப்பு சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “டிசம்பர் 11-ம் தேதி ஈஷாவுக்குச் சென்ற சுபஸ்ரீயை, கடந்த 18-ம் தேதி முதல் காணவில்லை என அவர் கணவர் காவல்துறையில் புகாரளித்தார்.
சிசிடிவி காட்சியில் யோகா உடையோடு சுபஸ்ரீ பதற்றத்தோடு ஓடுவதைப் பார்க்க முடிந்தது. யாருக்கு பயந்து அவர் ஓடினார், ஒரு வாரம் அங்கிருந்தவருக்கு கடைசி நாளில் ஏற்பட்ட பிரச்னை என்ன. போலீஸார் இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து,13 நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர்.
கடைசியில் அவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுபஸ்ரீயின் உடல் அவசர அவசரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவர்கள் குடும்ப வழக்கத்துக்கு மாறாக எரியூட்டப்பட்டுள்ளது.
இது கோவை மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஷாவில் இப்படி தொடர்ந்து மர்ம மரணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை உடனடியாக விசாரணைக்கு குழு அமைத்து மாநில அரசு விசாரிக்க வேண்டும். இந்த நிகழ்வுகளை கோவை மக்கள் பீதியோடு பார்க்கின்றனர்.
சமீபத்தில் பா.ஜ.க தலைவர் நட்டா மற்றும் மத்திய அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈஷாவுக்கு வருவதால் தங்களை யாரும் கேட்க முடியாது என அவர்கள் மக்களை அச்சுறுத்துகின்றனர்” என்றார்.