பா.ம.க சார்பில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்பட்ட கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், “அ.தி.மு.க நாலா ஒடஞ்சிருக்கு, தி.மு.க மீது மக்களோட விமர்சனங்கள் பயங்கரமா இருக்கு. அடுத்து நாம தான் இருக்கோம். மத்தவங்களாம் வெறும் சத்தம் தான்” என்று அன்புமணி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க குறித்த அன்புமணியின் பேச்சுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அன்புமணியின் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “உண்மையில் ஒருபக்கம் வருத்தமும் வேதனையும். ஒருபக்கம் கடுமையான கண்டனத்தையும் நாங்க தெரிவிச்சிக்கிறோம்.
இந்தக் கட்சியை ஏத்தி விட்டது யாரு… அம்மா இல்லன்னா இந்த கட்சியே தெரியாது வெளியில. அம்மா கூட்டணி வச்சதால கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குது. அதுக்கு முன்னாடி கட்சிக்கு அங்கீகாரமே கிடையாது. 1998-ல் அம்மா, கூட்டணிக்கு வந்த பிறகுதான் 5 சீட்டு கொடுக்குறாங்க. 5-ல 4 வராங்க. அதனாலதான் அந்த கட்சிக்கு தேர்தல் ஆணையத்தோட அங்கீகாரம். இல்லனா அங்கீகாரம் கிடைக்குமா. இப்டிலாம் நன்றி மறந்துட்டு அன்புமணி ராமதாஸ் பேசினா, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் தொண்டன் அல்ல, உங்க பக்கத்தில் இருக்கிற தொண்டன்கூட உங்களை மதிக்க மாட்டான். 2001-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தவுடன் 27 சீட்டு அம்மா கொடுக்கிறாங்க. அதுல 20 வறீங்க. யாருடைய தயவால வந்தீங்க. உங்க தயவால நாங்க வந்தோமா…
எங்க தயவாலதான் சட்டமன்றத்துக்குள்ள வந்தீங்க. எங்க தயவாலதான் நாடாளுமன்றத்துக்குள்ள போனீங்க. எங்க தயவாலதான் மத்திய அமைச்சர் ஆனீங்க. அப்படியெல்லாம் இருந்துட்டு இன்னிக்கி கட்சி நாலா உடைஞ்சிருச்சுன்னு சொன்னா… உங்க கட்சியை பத்தி பேசுங்க. இன்னைக்கும் பலம்வாய்ந்த அ.தி.மு.க-வ சிறுமைப்படுத்திவிடலாம்னு நீங்க பேசினா சிறுமையாகிடுமா. யாரும் அ.தி.மு.க-வை சிறுமைப்படுத்த முடியாது. அன்புமணி ராமதாஸைப் பார்த்து எள்ளி நகையாடக்கூடிய வகையிலதான் அந்த கூற்று இருக்கு. வீணா சீண்டினா அதற்கு தக்க பதிலடி நிச்சயமா நாங்களும் கொடுப்போம். பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம். கண்டிப்பா ஒன்னு சொன்னா நூறு சொல்லுவோம்” என்றார்.