உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது புதினின் உடல்நிலைக்கு குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், புதின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தவாறே இருக்கின்றன.
அதைத் தொடர்ந்து, புதினின் சமீபத்திய வீடியோக்களில் அவரால் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கை கால்கள் உதறுவதாகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து, அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் இங்கிலாந்து ஊடகமான The Independent-ல் ரஷ்ய உளவாளி ஒருவர் அதிர்ச்சித் தகவலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், உத்தியோகபூர்வ மாஸ்கோ இல்லத்தில் புதின் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், அவர் விழுந்தபோது அவரது கட்டுப்பாடின்றி மலம் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. புற்றுநோய் அவரது வயிறு மற்றும் குடலைப் பாதித்ததால் மலம் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு இந்த தகவல்கள் எதையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.