பொதுவாகவே திருட்டு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் போலீஸார் விசாரிக்கும் விதமே அதிரடியாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். அதில் சில போலீஸார் பேசியே என்ன நடந்தது என்பதை திருடனின் வாயாலே வாங்கிவிடுவார். அது போலீஸாரின் மிரட்டலாகவும் இருக்கலாம் அல்லது சாதூர்யமான பேச்சுத் திறமையாவும் இருக்கலாம். இந்த நிலையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியொருவர், திருடனிடம் செய்தியாளர் முன்னிலையில் விசாரணை செய்த விதமும், அதற்கு அந்த திருடன் தந்த பதிலும் பலரை ரசிக்க வைத்திருக்கிறது.
முதலில் துர்க் நகர எஸ்.பி அபிஷேக் பல்லவா என்ற அதிகாரி எங்கு திருடினாய், எப்படி திருடினாய் என்ற வழக்கமான கேள்விகளைக் கேட்காமல், `திருடிய பிறகு எப்படி உணர்ந்தாய்?’ எனத் திருடனிடம் கேட்டார். அதற்கு திருடன் சற்று நிதானமாக, `அது நன்றாக இருந்தது, ஆனால் அதற்காகப் பின்னர் வருத்தப்பட்டேன்’ என்றான். அதையடுத்து `ஏன் வருத்தப்பட்டீர்கள்…’ என போலீஸ் அதிகாரி கேட்க, `நான் ஒரு ஒரு தவறு செய்துவிட்டேன்’ என்று திருடன் கூறுகிறான். அதன்பிறகு போலீஸ் அதிகாரி, `சரி எவ்வளவு பணம் திருடினாய்?’ என்று திருடனிடம் கேட்டார். உண்மையை ஒப்புக்கொண்ட அந்த திருடன், `10,000 ரூபாய்’ என்று சொன்னான்.
`சரி அந்த பணத்தை என்ன செய்தாய்?’ என்று போலீஸ் அதிகாரி கேட்க, `ஏழைகளுக்கு கொடுத்துவிட்டேன்’ என்று திருடன் கூறியதும், `எங்கு, எப்படி’ என போலீஸ் அதிகாரி அடுத்து கேட்டார். அதற்கு அந்த திருடன் கூறிய பதில் தான், போலீஸ் அதிகாரியை அடுத்து கேள்வியே கேட்கவிடாமல் தடுத்துவிட்டது.
அதாவது, `தெருவோரங்களில் குளிரில் நடுங்கும் மாடு, நாய், சில மனிதர்களுக்கு போர்வைகளாகக் கொடுத்துவிட்டேன்’ என்று திருடன் பதிலளித்தான். இதைக் கேட்ட அந்த போலீஸ் அதிகாரி, `உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கட்டும்’ என திருடனை வாழ்த்தினார். திருடனும், `ஆசீர்வாதம் கிடைத்தது சார்’ எனக் கூறினார். தற்போது போலீஸ் அதிகாரிக்கும், அந்த திருடனுக்கு இடையிலான அந்த விசாரணையின் உரையாடல், வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.