நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தொப்பக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன். இவர், தமிழக வனத்துறையில் வேட்டைத் தடுப்பு காவலராகப் பணியாற்றி வருகிறார். தெப்பக்காடு லைன் பாடிக்கு சற்று தொலைவில் இயற்கை உபாதை கழிக்க இன்று மதியம் சென்றிருக்கிறார் பொம்மன். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த புலி ஒன்று, பொம்மன் மீது திடீரென சீறிப்பாய்ந்திருக்கிறது. அதில் நிலைக்குலைந்து கீழே விழுந்த பொம்மன், சுதாரித்துக் கொண்டு புலியிடம் உயிர் போராட்டம் நடத்தியிருக்கிறார். சில நிமிடங்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் மிக சாதுர்யமாகச் செயல்பட்டு புலியை விரட்டியத்திருக்கிறார். உடனடியாக அங்கிருந்து தப்பி உயிர் பிழைத்து ஓடி வந்திருக்கிறார்.
புலியின் நகங்கள், பற்கள் பதிந்ததில் பொம்மனின் தலை, கை, கால், முதுகு என பல இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட வனத்துறையினர் உடனடியாக பொம்மனை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஊட்டியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.