பஞ்சாப் மாநிலத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர், நான்கு இளம்பெண்களால் கடத்திச்செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாப்பின் ஜலந்தரைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். அவர் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை நான் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது புர்தலா சாலையில் வெள்ளை காரில் வந்த நான்கு இளம்பெண்கள், அந்த நபரிடம் துண்டு சீட்டு ஒன்றைக் காட்டி முகவரி கேட்டிருக்கின்றனர். அப்போது திடீரென அந்தப் பெண்கள் அவரின் கண்களில் ஏதோவொன்றை தெளித்துவிட்டு பின்னர் மயக்கமடையச் செய்து, அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் அந்த நபர் கண்விழித்து பார்த்தபோது அடுத்த நாள் காலை ஒரு வனப்பகுதியில் மயக்க நிலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார். இதில் கடத்திச்சென்ற பெண்கள், காரில் அந்த நபருக்கு கட்டாயப்படுத்தி போதைப்பொருள், மது அளித்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மயக்கம் தெளிந்து வீடு திரும்பிய அந்த நபர், இது குறித்து போலீஸில் புகாரளிக்காமல்… ஊடங்களிடம் தனக்கு நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். ஊடகங்களிடம் பேசிய அந்த நபர், “என்னைக் கடத்திச்சென்ற இளம்பெண்கள் பார்ப்பதற்கு நல்லவர்கள் போல் தெரிந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு, என்னிடம் பஞ்சாபி மொழியில் பேசினார்கள். பின்னர் என்னைக் கடத்திச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பஞ்சாப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.