தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாள்களாக மாநிலத்தின் பலவேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மயிலாப்பூர், மெரினா, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில், தமிழக, கேரள பகுதிகளைக் கடந்து அரபிக் கடல் பகுதிக்குச் செல்லக்கூடும்.

சென்னை மழை

இதன் காரணமாக இன்று தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

வானிலை ஆய்வு மையம்

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறது

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.