முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் நேற்று விடுதலை உத்தரவு வெளியானது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட உள்ள நிலையில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் அரசியல் கட்சியினரிடையே நிலவி வருகிறது. இது குறித்து முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யத் தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றவர்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள் ஆகியோர் மீது பொய்வழக்கு போட்டு அவர்களை கைது செய்தது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராகவும், முன்னாள் பிரதமராகவும் இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டால் அவப்பெயர் உண்டாகும் என்று கருதியே இத்தனை நாள்களாக அவர்களை விடுதலை செய்ய ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர்.
ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை தற்போது நீதித்துறை செய்துள்ளது. அந்த 6 பேரையும் விடுதலை செய்து நல்லத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை நான் வரவேற்கிறேன். இந்த 6 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஏற்கெனவே, பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். வெறுமனே பேட்டரி வாங்கித் தந்ததாகத் தான் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 18 வயதில் கைது செய்யப்பட்ட அவர் 30 ஆண்டுகள் கழித்துதான் விடுதலை செய்யப்பட்டார். இப்போதாவது 6 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்களே என்று மகிழ்ச்சி அடைகிறேன். நீதித்துறை நீதியை நிலைநாட்டியுள்ளது” என்றார்.