ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள, 2022-ம் ஆண்டுக்கான ஆசியாவின் சக்திவாய்ந்த 20 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில், மூன்று இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் இதழின் நவம்பர் வெளியீட்டில், மூன்று ஆண்டு கோவிட்-19 தொற்றின் போது நிலவிய நிச்சயமற்ற சூழல், நெருக்கடிகளுக்கு மத்தியில், பல்வேறு உத்திகளைக் கொண்டு வந்து தொழிலில் சாதித்த, ஆசியாவைச் சேர்ந்த 20 பெண்களை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின்போது உருவான அசாதாரண நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளித்து, தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்ற பெண்களின் பட்டியலில், மூன்று இந்திய தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சோமா மண்டல், எம்க்யூர் பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நமீதா தாப்பர், ஹோனசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் இணை நிறுவனர் கஜல் அலக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் தொழிலதிபர்களில் சிலர், கப்பல் போக்குவரத்து, சொத்து மற்றும் கட்டுமானம் போன்ற கடினமான துறைகளில் உள்ளனர். அதேபோல் தொழில்நுட்பம், மருந்து பொருட்கள் போன்ற துறைகளில் தொடர்ந்து புதுமைகளை புகுத்தி சாதித்து வருவதாக, ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.